தலித் சட்ட மாணவியை பலாத்காரம் செய்து கொன்ற இளைஞர் அமீர் உல் இஸ்லாமுக்கு தூக்கு தண்டனை!
கேரள மாநிலம் பெரும்பாவூரைச் சேர்ந்தவர் 30 வயதான சட்ட மாணவி ஜிஷா. தலித் சமுதாயத்தைச் சேர்ந்த இவர், கடந்த 2016ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 28ஆம் தேதி வீட்டில் இருந்த போது, இளைஞர் ஒருவரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். அந்த இளைஞர் அம்ரூல் இஸ்லாமுக்கு எர்ணாகுளம் நீதிமன்றம் இன்று தூக்கு தண்டனை வழங்கியது.
கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் ராயமங்கலம் பஞ்சாயத்துக்குட்பட்ட பகுதியில் உள்ளது இராவிச்சிரா. இந்தக் கிராமத்தைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் எர்ணாகுளத்தில் உள்ள அரசு சட்டக் கல்லூரியில் படித்து வந்தார். 2016 ஏப்.28 அன்று, இரவு மாணவி வீட்டில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். பணி முடிந்து அன்று இரவு வீடு திரும்பிய மாணவியின் தாய், அவரை சடலமாக கண்டதும் அலறி துடித்து போலீஸாருக்கு தகவல் கொடுத்தார். சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் இளம் பெண்ணின் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பிரேத பரிசோதனை அறிக்கையில் அந்தப் பெண் மிகக் கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டிருப்பதாக குறிப்பிடப்பட்டது. அந்த அறிக்கை குறித்து அதிகாரிகள் கூறியபோது, "மிகக் கூர்மையான ஆயுதத்தால் அப் பெண்ணின் கருப்பையும், குடலும் சிதைக்கப்பட்டுள்ளது. பெண்ணின் நெஞ்சுப் பகுதியில் 13 செ.மீ. ஆழத்துக்கு காயம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. பெண்ணின் கல்லீரலும் சிதைக்கப்பட்டுள்ளது. இதுதவிர துணியால் பெண்ணின் வாய், மூக்கு பகுதியை பொத்தி மூச்சுத் திணறல் ஏற்படுத்தப்பட்டுள்ளது. உடல் முழுவதும் 30 இடங்களில் படுகாயங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன" என்று கூறினர்.
இந்தப் படுகொலைச் சம்பவம் கேரள மாநிலத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. கேரளத்தில் பெரும் புயலைக் கிளப்பிய இந்தச் சம்பவத்தை அடுத்து, சம்பந்தப் பட்ட பெண்ணின் வீட்டுக்குச் சென்று ஆறுதல் கூறியிருந்தார் கேரள முதல்வராக இருந்த உம்மன் சாண்டி. மேலும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை போட்டுத் தரப்படும் என்று சொன்னார்.
இப்படி புயலைக் கிளப்பிய ஜிஷா கொலை வழக்கில் குற்றவாளியைப் பிடிக்க கூடுதல் டி.ஜி.பி.சந்தியா தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழுவினர் தீவிரமாக விசாரணை நடத்தினார்கள். இது தொடர்பாக தமிழ்நாட்டில் காஞ்சீபுரத்தில் பதுங்கி இருந்த அசாம் மாநிலத்தைச் சேர்ந்த கட்டிடத் தொழிலாளியான அமீர் உல் இஸ்லாமை(23) போலீசார் கைது செய்தனர்.
ஓராண்டாக இந்த வழக்கு எர்ணாகுளம் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கின் விசாரணையில் நேற்று முன்தினம் தீர்ப்பு வழங்கப்பட்டது. கொலை செய்ததாகக் கூறப்படும் அமீருல் இஸ்லாம், கொலை செய்ததற்கான ஆதாரங்கள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளதால், அவர் குற்றவாளி என நீதிபதி தீர்ப்பளித்தார். இவருக்கான தண்டனை விவரங்களை வியாழக்கிழமை இன்று அறிவிப்பதாக நீதிபதி கூறியிருந்தார்.
அதன்படி எர்னாகுளம் நீதிமன்றத்தில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அந்தத் தீர்ப்பில் ஜிஷா கொலை வழக்கில் கைதான அசாம் வாலிபர் அமீர் உல் இஸ்லாமிற்கு தூக்குத் தண்டனை விதிப்பதாக நீதிபதி குறிப்பிட்டிருந்தார். இது கேரளத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.