பெண்களுக்கு எதிராக யார் தவறு செய்தாலும் கடும் நடவடிக்கைதான் …யாரும் தப்ப முடியாது… பினராயி விஜயன் எச்சரிக்கை
பெண்களுக்கு எதிராக அட்டூழியம் செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், குற்றம் புரிவோருக்கு தண்டனை பெற்றுத் தர பெண்கள் முன்வருவது நல்ல அறிகுறி, கேரள அரசு அதற்கு துணைநிற்கும் எனவும் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
கேரள மாநிலம் கோவளம் தொகுதியைச் சேர்ந்த காங்கிரஸ் எம்எல்ஏ வின்சென்ட், அப்பகுதியைச் சேர்ந்த 51 வயது பெண் ஒருவருக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக புகார் எழுந்தது.
இதைத் தொடர்ந்து கோவளம் போலீசார் வின்சென்ட் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில், எம்.எல்.ஏ. வின்சென்ட் பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினரை தொலைபேசிமூலம் மிரட்டிய ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் எம்.எல்.ஏ.வின் தொலைபேசி விவரங்களை பரிசோதித்த போலீசார் அவர் கடந்த சில மாதங்களாக அப்பெண்ணுடன் தொலைபேசியில் பேசிவந்திருப்பதை கண்டுபிடித்தனர்.
இதனையடுத்து போலீசார் வின்சென்ட்டை கைது செய்தனர். இதற்கு கண்டனம் தெரிவித்த வின்சென்ட், முதலமைச்சர் பினராயி விஜயன் அலுவலகத்தில் இருந்து வந்த அழுத்தத்தின் காரணமாகவே தான் கைது செய்யப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டினார்.
வின்சென்ட்டின் குற்றச்சாட்டுக்கு மறுப்புத் தெரிவித்த முதலமைச்சர் பினராயி விஜயன், பெண்களுக்கு எதிராக அட்டூழியம் செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என்றும் எச்சரித்தார்.
குற்றம் புரிவோருக்கு தண்டனை பெற்றுத் தர பெண்கள் முன்வருவது நல்ல அறிகுறி என்றும் கேரள அரசு அதற்கு துணைநிற்கும் எனவும் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.