கருப்பு பணத்தை ஒழிக்க போராடும் மோடி; கள்ளநோட்டு அச்சடிக்கும் பா.ஜனதா தொண்டர்...
கேரள மாநிலம் திருச்சூரில் கள்ள நோட்டு அச்சடித்து வந்த பாஜக பிரமுகர் ராகேஷ் வியாழக்கிழமை அன்று கைது செய்யப்பட்டார்.
சகோதரர்கள்
திருச்சூர் மதிலகம் அருகே, அஞ்சம்பருதியில் உள்ள அவரின் வீட்டில் இருந்து 1.37 லட்சம் ரூபாய் கள்ள நோட்டுகளும், அச்சு எந்திரங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்த வழக்கில் தலைமறைவான அவரின் சகோதரர் ராஜீவுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கண்டுபிடித்தது எப்படி?
சகோதரர்கள் இருவரும் மற்றவர்களுக்கு அதிக வட்டிக்கு பணம் கொடுப்பதை அறிந்த காவல்துறை, அவர்களின் வீட்டைப் பரிசோதனை செய்தது.
அப்போது பல வண்ண பிரிண்டர், ஸ்கேனர், நோட்டுகளை வெட்டும் கருவி, மை, பிரிண்டிங் தாள் மற்றும் மடிக்கணினி ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனர்.
மேல் தளத்தில்
கள்ள நோட்டுகளை அச்சடிக்கும் ஏ4 தாள்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
ராகேஷ் இல்லத்தின் மேல் தளத்தில் கள்ள நோட்டுகள் அச்சடிக்கப்பட்டு வந்தன. ரூ.2000, ரூ.500, ரூ.50, ரூ.20 ஆகிய நோட்டுகள் அங்கே போலியாக அச்சடிக்கப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
ராகேஷின் இலக்கு
படிக்காத மீனவ மக்களும், லாட்டரி விற்பனையாளர்களுமே ராகேஷின் இலக்காக இருந்துள்ளனர்.
பாஜகவின் அஞ்சம்பருதி சாவடியின் தலைவராக இருந்த ராகேஷ், யுவ மோர்ச்சாவின் தீவிர உறுப்பினர். அவரின் சகோதரர் ராஜீவ் கட்சியின் தலித் மோர்ச்சா உறுப்பினராக இருந்துள்ளார்.
சகோதரர்கள் இருவரும் ஏற்கனவே பல வழக்குகளில் சிக்கியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.