2Gscam Single line verdict read out by judge All accused in 2G spectrum scam case have been acquitted

ஆரவார ஆ.ராசா! களிப்பில் கனிமொழி! ரகளையான ராஜாத்தியம்மாள்! லேசாய் புரிந்து புன்னகைக்கும் கருணாநிதி: ஆக மொத்தத்தில் தப்பியது தி.மு.க.வின் தலை.

2017 டிசம்பர் 21-ம் தேதியான இன்று தி.மு.கவுக்கு மிகப்பெரிய சோதனை நாளாக சில நொடிகளுக்கு முன்பு வரை இருந்தது. ஆனால் இப்போது துள்ளிக் குதிக்கிறது தி.மு.க. காரணம்? அக்கட்சியின் தலையெழுத்தை தலைகீழாக மாற்றி தரைமட்டமாக்க கூடிய சூழலில் இருந்த சூழ்நிலை அப்படியே மாறி தப்பிப் பிழைத்திருக்கிறது கட்சி. 

காரணம்? 2ஜி வழக்கிலிருந்து அத்தனை பேரும் விடுதலையாகி இருக்கிறார்கள். 
கிட்டத்தட்ட ஆறேழு வருடங்களாக தி.மு.க.வை வெச்சு செய்து கொண்டிருந்த எதிர்கட்சிகள் மிகப்பெரிய ஏமாற்றத்தை சந்தித்திருக்கின்றன. 

எந்த காரணத்தினால் விடுதலை?

‘சட்டப்பூர்வமாக குற்றச்சாட்டை சி.பி.ஐ. நிரூபிக்கவில்லை’ எனக்கூறி ஷைனி இந்த தீர்ப்பை வாசித்துள்ளார். 

தீர்ப்பைக் கேட்டதும் அகமகிழ்ந்து வெளியே வந்த ஆ.ராசா ஆரவாரமாகி தன்னை கொண்டாடும் கட்சியினரை பார்த்து கண்ணீர் மல்க கைகூப்பினார், கனிமொழிக்கு களிப்பு தாங்கவில்லை, முகமெல்லாம் நிம்மதி சிரிப்பு. உடன் நின்றிருந்த அவரது அம்மா ராஜாத்தியோ ‘நீதி நின்னுடுச்சுய்யா’ என்று அருகிலிருந்தவர்களை நோக்கி ரகளையாக தெரிவித்திருக்கிறார். 

துரைமுருகன் வாயிலாக இந்த சேதி ஸ்டாலினுக்கும் பகிரப்பட்டிருக்கிறது. கோபாலபுரத்தில் அமர்ந்திருக்கும் கருணாநிதியிடம் அவரது உதவியாளர் சத்யா இந்த தீர்ப்பை பற்றி சொல்லி ‘கனியம்மா விடுதலையாயிட்டாங்க’ என்று சொல்ல ஓரளவு நிலை புரிந்து புன்னகைத்திருக்கிறார் கருணாநிதி. 
ஆக மொத்தத்தில் தலை தப்பிப் பிழைத்திருக்கிறது தி.மு.க.