கர்நாடக அதிருப்தி எம்.எல்.ஏ.க்களின் வழக்கு... உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு..!
கர்நாடக எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமாவை ஏற்க சபாநாயகருக்கு உத்தரவிட முடியாது என உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. அதேவேளையில், ராஜினாமா கடிதம் வழங்கிய எம்.எல்.ஏ.க்களை நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க கட்டாயப்படுத்த முடியாது எனவும் தலைமை நீதிபதி கூறியுள்ளார்.
கர்நாடக எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமாவை ஏற்க சபாநாயகருக்கு உத்தரவிட முடியாது என உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. அதேவேளையில், ராஜினாமா கடிதம் வழங்கிய எம்.எல்.ஏ.க்களை நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க கட்டாயப்படுத்த முடியாது எனவும் தலைமை நீதிபதி கூறியுள்ளார்.
கர்நாடகாவில் மஜத-காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. முதல்வராக குமாராசாமி இருந்து வருகிறார். இந்த நிலையில் ஆளும்கட்சி மீது அதிருப்தி கொண்ட 14 எம்.எல்.ஏ.க்கள் சபாநாயகரிடம் ராஜினாமா கடிதம் கொடுத்தனர். மேலும், 2 சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் அரசுக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெற்றனர். இதனால் கூட்டணி அரசு கடும் நெருக்கடிக்கு தள்ளப்பட்டது.
இந்நிலையில் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் கொடுத்த கடிதத்தின் மீது சபாநாயகர் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் தாமதம் செய்துவருவதாக எம்.எல்.ஏ.க்கள் சபாநாயகருக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அம்மனு மீதான விசாரணை நேற்று தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. முதலில் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி வாதாடும்போது, ‘‘அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் சிலரின் தகுதி நீக்கம் தொடர்பான வழக்குகள் நிலுவையில் இருப்பதால் ராஜினாமா மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்கிறேன் என சபாநாயகர் கூறுகிறார். அதற்கும் இதற்கும் சம்பந்தமே கிடையாது. எங்கள் கட்சிக்காரர்கள் கொடுத்துள்ள ராஜினாமா மீது சபாநாயகர் உடனடியாக முடிவெடுக்க வேண்டும். 18-ம் தேதி நடைபெற உள்ள நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்து கொள்ள அவர்கள் கட்டாயப்படுத்தப் படுகிறார்கள். எங்கள் தரப்பு எம்.எல்.ஏ.க்கள் விருப்பத்திற்கு உட்பட்டு ராஜினாமா கடிதத்தை கொடுத்துள்ளார்கள். அதனால் அதற்கு மாறாக செயல்பட சொல்ல சபாநாயகருக்கு உரிமை கிடையாது’’ என வாதிட்டார்.
அதை தொடர்ந்து சபாநாயகர் தரப்பு மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி வாதிடுகையில், “எம்.எல்.ஏ.க்கள் தரப்பு கூறுவது போல தகுதி நீக்க நடவடிக்கைக்கு முன்பே ராஜினாமா கடிதம் கொடுக்கவில்லை. மேலும் இந்த விவகாரத்தில் அரசியல் உள்நோக்கத்தோடும் சபாநாயகர் செயல்படவில்லை. சபாநாயகருக்கு நீதிமன்றங்கள் உத்தரவு பிறப்பிக்க முடியாது என்பது தான் சட்டமாக இருக்கிறது. மேலும், அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் தீர்ப்பு இன்று வெளியிடப்படும் என உச்சநீதிமன்றம் அறிவித்திருந்தது.
இந்நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதில், கர்நாடக எம்.எல்.ஏ.க்கள் தொடர்ந்த வழக்கில் சபாநாயகருக்கு உத்தரவிட உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும், எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா விவகாரத்தில் சபாநாயகருக்கு முழு சுந்திரம் உள்ளது என தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 15 எம்.எல்.ஏ.க்கள் மீது எடுக்கும் நடவடிக்கை குறித்து சபாநாயகர் நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும். அதேவேளையில், நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்பது எம்.எல்.ஏ.க்களின் சொந்த முடிவு என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.