கர்நாடக உள்துறை அமைச்சர் பரமேஸ்வரா ராஜினாமா...!!! - கட்சி வேண்டுகோளை ஏற்று முடிவு
கர்நாடக மாநில உள்துறை அமைச்சர் ஜி.பரமேஸ்வரா தன் அமைச்சர் பதவியை திடீரென ராஜினாமா செய்துள்ளார்.
கடந்த 1993 ஆம் ஆண்டு பரமேஸ்வரா பட்டு வளர்ப்பு அமைச்சராக பணியாற்றினார். தொடர்ந்து 1998 முதல் 2004 வரை உயர் கல்வி அமைச்சராக பணியாற்றினார்.
1989, 1999, மற்றும் 2004 ஆம் ஆண்டுகளில் அவர் மதுகிரியைப் பிரதிநிதித்துவப்படுத்தினார்.
2014 ஆம் ஆண்டு ஜூலை 1 ஆம் தேதி சட்டமன்ற கவுன்சிலில் தேர்ந்தெடுக்கபட்டார்.
இந்நிலையில், நேற்று நடந்த அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில் அமைச்சர் பரமேஸ்வரா கலந்து கொண்டார். அந்த கூட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி மாநில அமைச்சரவையிலிருந்து விலகி விட்டு கட்சித் தலைமையின் பொறுப்புகளை நிறைவேற்றுவதில் தனது நேரத்தையும் சக்தியையும் செலவிட வேண்டும் என பரமேஸ்வராவை கேட்டுக் கொண்டது.
அதன்படி டெல்லியில் காங்கிரஸ் தலைமையை சந்தித்த பிறகு தனது பதவியை ராஜினாமா செய்வது குறித்த கடிதத்தை பரமேஸ்வரா முதலமைச்சர் சித்தராமையாவிடம் கொடுத்தார்.
ராஜினாமாவை ஏற்றுக் கொண்ட முதலமைச்சர் கர்நாடக ஆளுநர் வாஜுபாய் வாலாவிற்கு அந்த கடிதத்தை அனுப்பி வைத்தார்.