கொரோனாவின் கட்டுப்பாட்டில் அமைச்சர் குடும்பம்.... மனைவி, மகள், அப்பாவிற்கு தொற்று உறுதி...!
அந்த பரிசோதனையில் அமைச்சர் மனைவி மற்றும் மகளுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கர்நாடகத்தில் கொரோனா வைரஸ் தொற்று முதலில் குறைவாகவே இருந்தது. ஆனால் தற்போது ஒவ்வொரு நாளும் பாதித்தோரின் எண்ணிக்கையும், வைரஸ் தொற்றால் உயிரிழப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. அங்கு நேற்று ஒரே நாளில் 249 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதுவரை கர்நாடக மாநிலத்தில் 9 ஆயிரத்து 399 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 5 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து கொரோனா தொற்றால் மரணமடைந்தோரின் எண்ணிக்கை 142 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்தும் விதமாக கர்நாடகாவின் சில பகுதிகளில் மீண்டும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் நேற்று ஆலோசனை நடத்திய முதலமைச்சர் எடியூரப்பா, பெங்களூருவில் தொற்று அதிகம் பரவும் பகுதிகளான கே.ஆர். மார்க்கெட், சித்தபுரா, விவிபுரம், கலசிபால்யா ஆகிய இடங்களில் கடுமையான ஊரடங்கை பின்பற்ற உத்தரவிட்டுள்ளார். மேலும் கொரோனா தொற்று அதிகம் உள்ள பகுதிகளை சீல் வைக்கவும், விதிகளை மீறுவோர் மீது வழக்குப்பதிவு செய்து கடுமையான நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் கர்நாடக மாநில மருத்துவ கல்வித்துறை அமைச்சர் சுதாகரின் தந்தை பி.என்.கேசவா ரெட்டிக்கு கொரோனா தொற்று இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர், சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதைத்தொடர்ந்து அமைச்சர் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கும் பரிசோதனை செய்யப்பட்டது.
இதையும் படிங்க: ஓடிடி உரிமையாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய முதலமைச்சர்... பிரதமரிடம் வைத்த அதிரடி கோரிக்கை...!
அந்த பரிசோதனையில் அமைச்சர் மனைவி மற்றும் மகளுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அமைச்சர் சுதாகர் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், எனது குடும்பத்தினருக்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனை முடிவுகள் வந்துவிட்டது. துரதிர்ஷ்டவசமாக எனது மனைவி மற்றும் மகளுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு, சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். எனக்கும், இரண்டு மகன்களுக்கும் கொரோனா தொற்று இல்லை. பரிசோதனை முடிவு நெகட்டிவ் என வந்துள்ளது. எனக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.