கர்நாடக ஆளுநரின் செயல் முட்டாள்தனமானது...! மூத்த வழக்கறிஞர் ராம்ஜெத் மலானி பளீச்!
கர்நாடகாவில், பாரதிய ஜனதாவை ஆட்சி அமைக்க ஆளுநர் எடுத்த முடிவு முட்டாள்தனமானது என்று மூத்த வழக்கறிஞர் ராம்ஜெத் மலானி கூறியுள்ளார்.
கர்நாடக சட்டமன்ற தேர்தலில் எந்தவொரு கட்சியும் பெரும்பான்மை பெறாத நிலையில் 104 இடங்களை மட்டுமே பெற்ற பா.ஜ.கவை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளார். இதனை எதிர்த்து காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகியவை எதிர்த்து வழக்கு போட்டது. விடிய விடிய நடந்த நீதிமன்ற விசாரணையில் இறுதியாக ஆளுநர் முடிவில் நீதிபதி தலையிட முடியாது என தெரிவித்து விட்டனர். கடும் சர்ச்சைகளுக்கு மத்தியில் எடியூரப்பா 23-வது முதலமைச்சராக பதவியேற்றார்.
இந்த நிலையில், பெரும்பான்மை இடங்களை வைத்துள்ள காங்கிரஸ் - மஜத கட்சியினர் தங்கள் எம்.எல்.ஏ.க்களுடன் விதான் சவுதாவில் தர்ணாவில் ஈடுபட்டு வருகின்றனர். நியாயம் கிடைக்கும் வரை போராடுவோம் என்று அவர்கள் கோஷமிட்டு வருகின்றனர். அப்போது பேசிய மஜத தலைவர் குமாரசாமி, அனைத்து மாநில கட்சிகளும் இந்த ஜனநாயக படுகொலைக்கு எதிராக திரள வேண்டும். மக்கள் வீதிக்கு வந்து போராட வேண்டும் என்றும் ஊழலைத்தான் துடைத்தெறிவேன் என்றார். ஆனால் ஜனநாயகத்தையே பிரதமர் மோடி துடைத்தெறிந்து விட்டார் என்று குமாரசாமி கூறியிருந்தார்.
ஆளுநரின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகாவில் மதச்சார்பற்ற ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். நியாயம் கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் என்றும் அவர்கள் கூறி வருகின்றனர்.
இந்த நிலையில், டெல்லியில் மூத்த வழக்கறிஞர் ராம்ஜெத் மலானியிடம் இது தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, கர்நாடக ஆளுநரிடம் பாஜக என்ன கூறியிருக்கிறது... அதை வைத்து ஆளுநர் வாஜூபாய் வாலா முட்டாள்தனமான முடிவு எடுத்துள்ளார் என்று கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். மேலும் பேசிய அவர், ஆளுநரின் முடிவு என்பது ஊழலையும், குதிரைபேரத்தையும், வெளிப்படையாக அழைப்பிதழ் வைத்து அழைப்பதுபோல் உள்ளது என்றார்.
ஆளுநர் தனக்கு அரசியலமைப்பு சட்டம் கொடுத்த பதவியையும், தகுதியையும் சட்டத்துக்கு விரோதமாக பயன்படுத்திவிட்டார். நான் எந்த கட்சிக்கும் விரோதமாகவோ ஆதரவாகவோ பேசவில்லை என்றும் ராம்ஜெத் மலானி அப்போது தெரிவித்தார்.