கர்நாடக பள்ளி பாடத்திட்டங்களில் மகாபாரதம், ராமாயணம், பகவத் கீதை உள்ளிட்ட இந்துமத நூல்களை சேர்க்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அம்மாநில கல்வித்துறை அமைச்சர் நாகேஷ் தெரிவித்துள்ளார்.
குஜராத் மாநிலத்தில் பள்ளிகளில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான பாடத்திட்டங்களில் 2022- 2023 ஆம் கல்வியாண்டு முதல் பகவத் கீதை சேர்க்கப்படும் என்றும் அம்மாநில அரசு அறிவித்தது. இந்நிலையில் குஜராத் மாநிலத்தை போல் கர்நாடக மாநிலத்திலும் பள்ளி பாடத்திட்டங்களில் இந்து மத நூல்களான பகவத் கீதை , ராமாயணம், மகாபாரதம் இணைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கர்நாடக கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அவர், பகவத் கீதை என்பது இந்துக்களுக்கானது மட்டுமல்ல. அது அனைவருக்குமானது. எனவே அடுத்த கல்வியாண்டு முதல் பகவத் கீதை, இராமாயணம், மகாபாரதம் , ராமாயணம் உள்ளிட்டவை பாடத்திட்டங்களில் சேர்க்கப்படும் என்றார்.மேலும் அடுத்த கல்வியாண்டு முதல் அனைத்து மதத்தினரும் கற்கும் வகையில் நீதி போதனை வகுப்புகள் தொடங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். இதுக்குறித்து முதல்வர் பசவராஜ் பொம்மையிடம் ஆலோசிக்க உள்ளதாகவும் கடந்த காலங்களில் பள்ளிகளில் நன்னெறி கல்வி நடத்தப்பட்டு வந்ததாகவும் கடந்த சில ஆண்டுகளாக இவை நிறுத்தப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.
மேலும் படிக்க: Hijab Verdict: ஹிஜாப் அணிவதற்கு தடை விதித்தது செல்லும்.. கர்நாடக உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு..!
பள்ளிகளில் பெற்றோர்களின் விருப்பத்திற்கு ஏற்ப நன்னெறி வகுப்புகள் தொடங்கப்படும் என்று கூறினார். கர்நாடகத்தில் இஸ்லாமிய பெண்கள் வகுப்புக்குள் ஹிஜாப் அணிந்து வர அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில் கர்நாடக அரசின் இந்த அறிவிப்பு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக கர்நாடக மாநிலம் உடுப்பியில் உள்ள அரசு பி.யூ.கல்லூரியில் பயின்று வந்த இஸ்லாமிய மதத்தை சேர்ந்த மாணவிகள் சிலர் சீருடை மீது ஹிஜாப் அணிந்து வந்தனர். இதற்கு அந்த கல்லூரி நிர்வாகம் தடை விதித்தது. அந்த தடைக்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்லாமிய மதத்தை சேர்ந்த அந்த மாணவிகள் தொடர் போராட்டம் நடத்தினர்.தொடர்ந்து பல்வேறு கல்லூரிகளில் மூஸ்லிம் மாணவிகள், ஹிஜாப் அணிய அனுமதிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி போராட்டத்தில் இறங்கினர்.
மேலும் படிக்க: ஹிஜாப் தீர்ப்புக்கு வலுக்கும் எதிர்ப்பு... தேர்வு எழுதாமல் மாணவிகள் பள்ளியில் இருந்து வெளிநடப்பு!!
இந்த பிரச்சனை மாநிலம் முழுவதும் விஸ்வரூபமெடுத்த நிலையில், கர்நாடக கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதற்கு தடைவிதிக்கப்பட்டது. ஹிஜாப் அணிவதற்கு தடை விதிக்கப்பட்டதற்கு எதிராக உடுப்பி முஸ்லிம் மாணவிகள், கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இந்த வழக்கை விசாரித்த கர்நாடக நீதிமன்றம், பள்ளி, கல்லூரிகளுக்குள் மாணவ-மாணவிகள் மத அடையாளத்தை வெளிப்படுத்தும் உடைகளை அணிந்து வரக்கூடாது என இடைக்கால உத்தரவு பிறப்பித்தது. மேலும், இந்த வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் தொடர்ந்து விசாரணை நடைபெற்று அண்மையில் தீர்ப்பு வழங்கப்பட்டது.

அதில் ஹிஜாப் அணிவது இஸ்லாம் மதத்தில் அவசியமான ஒன்றல்ல. அரசு பள்ளிகளில் ஒரே சீருடை அணிந்து வர வேண்டும் என்ற கர்நாடகா மாநில அரசு பிறப்பித்திருந்த உத்தரவு செல்லும் என்று கூறியுள்ளனர். இதனை எதிர்த்து 6 மாணவிகள் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: ஹிஜாப் வழக்கு… கர்நாடக உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மாணவிகள் மேல்முறையீடு!!
