நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில், அத்தியாவசிய பொருட்கள் வாங்கும் கடைகளில் மக்கள் கூட்டத்தை தவிர்க்க கர்நாடக டிஜிபி பிரவீன் சூட் அதிரடியான உத்தரவை பிறப்பித்துள்ளார். 

உலகையே அச்சுறுத்திவரும் கொரோனாவின் பாதிப்பு, இந்தியாவிலும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு 700ஐ நெருங்கிவருகிறது. 16 பேர் கொரோனாவிற்கு பலியாகியுள்ளனர். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

கொரோனா வைரஸ், சமூகத்தில் பரவுவதை தடுக்கும் விதமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏப்ரல் 14ம் தேதி வரை நாடு தழுவிய ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. ஆனால் அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்யும் விதமாக மளிகை கடைகள் மற்றும் காய்கறிக்கடைகள் திறந்துள்ளன. 

மிகவும் அத்தியாவசிய தேவையில்லாமல் மக்கள் வெளியே வர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தாலும், சிலர் வேண்டுமென்றே காரணமே இல்லாமல் வெளியே சுற்றித்திரிகின்றனர். தனிமைப்படுதல் மற்றும் சமூக விலகல் குறித்த விழிப்புணர்வை மத்திய, மாநில அரசுகள் ஏற்படுத்தினாலும் சிலர் அலட்சியமாக இருக்கின்றனர்.

ஆனாலும் காரணமே இல்லாமலும் பொய்யான காரணங்களை கூறியும் சிலர் பொதுவெளியில் சுற்றித்திரிகின்றனர். அவ்வாறு சமூக பொறுப்பின்றி, ஊரடங்கை மீறி வெளியே சுற்றுபவர்கள் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துவருகின்றனர்.

மளிகைக்கடைகள், காய்கறிக்கடைகள் திறந்திருந்தாலும், பால், காய்கறிகள், நீர் ஆகியவை கிடைப்பதில் தட்டுப்பாடு நிலவுவதாக கர்நாடக டிஜிபிக்கு தகவல் சென்றுள்ளது. அதுமட்டுமல்லாமல் மக்கள், பொருட்களை வாங்குவதற்காக கூட்டமாக கூடும் நிலைமையும் நிலவுகிறது. 

எனவே சமூக விலகலையும் உறுதிப்படுத்தும் விதமாகவும், பொருட்கள் கிடைப்பதில் உள்ள தட்டுப்பாட்டை கலையும் நோக்கிலும், கர்நாடகாவில் சூப்பர் மார்க்கெட் மற்றும் மளிகைக்கடைகள் 24 மணி நேரமும் இயங்கலாம் என்று கர்நாடக டிஜிபி பிரவீன் சூட் உத்தரவிட்டுள்ளார்.

மக்கள் கூடுவதை தவிர்க்கவும் சமூக விலகலை கடைபிடிப்பதை உறுதி செய்யவும், அதேநேரத்தில் மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதில் எந்த சிக்கலும் இருக்கக்கூடாது என்பதற்காகத்தான் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. எனவே அதை உணர்ந்து, அத்தியாவசிய பொருட்கள் வாங்க கடைக்கு செல்பவர்கள் சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும்.