காவிரி நீரை பங்கிட்டுக் கொள்வதில் நீண்ட நாட்களாக தகராறு இருந்து வருகிறது. காவிரி நடுவர் நீதிமன்ற உத்தரவுப்படி ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்துக்கு தர வேண்டிய தண்ணீரை தராமல் கர்நாடக அரசு வம்பு செய்து வருகிறது.

இதனைத் தொடர்ந்து தமிழ அரசு சார்பில் உச்சநீதிமன்ற தொடரப்பட்ட வழக்கில், கர்நாடக அரசு நாள்தோறும் காவிரியில் இருந்து 2000 கன அடி நீர் திறந்துவிட வேண்டும் என உத்தரவிட்டது.

ஆனால் கர்நாடக அரசு இந்த உத்தரவை வழக்கம் போல் கிடப்பில் போட்டுவிட்டது.

இந்நிலையில் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி தமிழகத்துக்கு காவிரியிலிருந்து ஒரு சொட்டு தண்ணீர் கூட திறந்து விட முடியாது என காவிரி கண்காணிப்புக் குழுவிடம் கர்நாடக அரசின் தலைமை செயலாளர் சுபாஷ் சந்திரா தெரிவித்தார்.

டெல்லியில் நடைபெற்ற காவிரி கண்காணிப்புக்குழுக் கூட்டத்தில் சுபாஷ் சந்திரா இதனைத் தெரிவித்தார்.

மாநிலம் முழுவதும் கடும் வறட்சி நிலவுவதால் கர்நாடக அணைகளில் உள்ள நீரின் அளவு மிக மோசமாக உள்ளது என்றும், அதனால்தான் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்து முடியாது என்று சுபாஷ் சந்திரா தெரிவித்தார்.

பெங்களூரு உட்பட கர்நாடகத்தில் பல நகரங்களுக்கு அதிக அளவு குடிநீர் தேவைப்படுவதால் உச்சநீதிமன்ற உத்தரவை செயல்படுத்த முடியாது எனவும் அவர் தெரிவித்தார்.

கர்நாடக அரசின் இந்த அறிவிப்பு டெல்டா பகுதி விவசாயிகளிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.