Asianet News TamilAsianet News Tamil

கர்நாடக முதல்வர் யார்? கடினமான முடிவுவை எடுக்கும் பொறுப்பு கார்கே கையில்!

கர்நாடக தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சிக்கு இப்போது சித்தராமையா மற்றும் சிவக்குமார் இருவரில் யார் முதல்வர் பதவி வகிக்கப் போகிறார் என்ற கடினமான முடிவை எடுக்கவேண்டிய நிலையில் உள்ளது.

Karnataka battle won, Congress now faces tough choice between Siddaramaiah & Shivakumar
Author
First Published May 14, 2023, 11:24 AM IST

கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் மற்றும் முன்னாள் முதல்வர் சித்தராமையா ஆகிய இருவரில் ஒருவரை முதல்வர் பதவிக்கு தேர்வு செய்யும் கடினமான பணியை காங்கிரஸ் இப்போது எதிர்கொள்கிறது. தேர்தல் முடிவுகளில் கட்சிக்கு அறுதிப் பெரும்பான்மை கிடைத்திருப்பதால் இந்த முக்கியமான முடிவை எடுப்பதில் அவசரப்படாமல் செயல்பட கட்சி திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.

ஞாயிற்றுக்கிழமை சட்டமன்றக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டியிருந்தாலும், அது முதல்வர் தேர்வு குறித்து முடிவு செய்யும் ஆலோசனையில் முதல் படியாக மட்டுமே இருக்கும் என்று சொல்லப்படுகிறது. ஒருமித்த கருத்து உருவாக 3-4 நாட்கள் ஆகலாம் என கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கட்சியை தேர்தல் களத்துக்குத் தயார்படுத்தும் வகையில் அமைப்பு ரீதியாக கட்சியின் சீரமைப்பு பணியில் ஈடுபட்ட சிவக்குமாரிடம் ஆட்சியை ஒப்படைக்க பலத்த ஆதரவு உள்ளது. ஆனால் காங்கிரஸ் கட்சியில் மிக அதிக மக்கள் செல்வாக்கு மிக்க மூத்த தலைவரான சித்தராமையாவும் தன் நிர்வாகத் திறமையை நிரூப்பித்தவர். சட்டமன்ற உறுப்பினர்களின் கருத்துகளை கணக்கில் எடுத்துக்கொண்டால், சித்தராமையா முன்னிலை பெறுவார் எனக் கூறப்படுகிறது.

கர்நாடகாவில் 43% வாக்குகளை வசப்படுத்திய காங்கிரஸ்! பரிதாப நிலையில் ஜேடிஎஸ்!

Karnataka battle won, Congress now faces tough choice between Siddaramaiah & Shivakumar

புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏக்களின் கருத்தைக் கவனத்தில் கொண்டு, உயர்மட்டக் குழு பார்வையாளர்களை அனுப்பி, யார் முதல்வராக வருவார் என முடிவெடுக்கப்படும் என சித்தராமையா கூறியுள்ளார்.

சிவகுமார் தனது சொந்தப் பகுதியான பழைய மைசூரு பிராந்தியத்தில் கட்சிக்கு சிறப்பான வெற்றியைப் பெற்றுத் தந்திருக்கிறார். தேவகவுடா காலத்தில் இருந்து ஜேடி(எஸ்) ஆக்கிரமித்துவந்த பகுதியில் பெற்ற வெற்றியின் மூலம் வொக்கலிகா சமூகத்தின் முகமாக உருவெடுத்துள்ளார். மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவராகவும் இருக்கும் சிவகுமார் ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்தியிடம் சொன்ன வாக்குறுதியின்படி மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைய வித்திட்டிருக்கிறார். அதே சமயம் சித்தராமையாவும் இதே பகுதி மண்ணின் மைந்தராக இருக்கிறார்.

சிபிஐ, அமலாக்கத்துறை, வருமான வரித்துறை போன்ற மத்திய புலனாய்வு அமைப்புகள் சிவகுமாருக்கு எதிராக தாக்கல் செய்த பல வழக்குகள் அவருக்கு மிகப்பெரிய சிக்கலாக இருக்கும். அவர் பணமோசடி மற்றும் வரி ஏய்ப்பு குற்றச்சாட்டில் சுமார் 50 நாட்கள் திகார் சிறையில் இருந்துள்ளார். தற்போது ஜாமீனில் உள்ளார். அவரை முதல்வராக்கினால், அவர் மீதான வழக்குகளை ஏஜென்சிகள் விரைவுபடுத்தி, அரசுக்கும் காங்கிரசுக்கும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது.

தோல்வி தோல்விதான்! கர்நாடக முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் பசவராஜ் பொம்மை

Karnataka battle won, Congress now faces tough choice between Siddaramaiah & Shivakumar

தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு உணர்ச்சிவசப்பட்டு பேட்டி அளித்த சிவக்குமார், “பாஜக ஒரு சதித்திட்டத்தை தீட்டியது. பாஜகவில் சேரவேண்டும் அல்லது சிறைக்குச் செல்லவேண்டும் என்று கூறியது. நான் சிறைக்கு செல்ல முடிவு செய்தேன். சோனியா காந்தி என்னை திகார் சிறைக்கு வந்து சந்தித்தார். அவர் என்னை மிகவும் நம்பினார்" என்று கண்ணீர் மல்கப் பேசினார்.

முதல்வர் பதவிக்கான தேடலின்போது, கர்நாடகாவில் கிடைத்துள்ள மிகப்பெரிய வெற்றியைக் 2024 பொதுத்தேர்தலிலும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற திட்டமும் கருத்தில் கொள்ளப்படும். கட்சியிலும் அதற்கு அப்பாலும் உள்ள பலர் சித்தராமையாதான் மாநிலத்திலும் மற்றும் மத்தியிலும் பாஜகவை எதிர்கொள்ள சிறந்த தேர்வாக இருப்பார் எனக் கருதுகின்றனர். இதுதான் என் கடைசி தேர்தல் என்றும் இனி தேர்தல் அரசியலில் இருந்து விலகி கட்சிப் பணிகளை மட்டும் கவனிக்கப்போகிறேன் என்றும் சித்தராமையா அறிவித்துள்ளார். அவர் 2013 முதல் 2018 வரை 5 ஆண்டுகள் நிலையான ஆட்சியைத் தந்த முதல்வர் என்ற நன்மதிப்பும் மக்கள் மத்தியில் இருக்கிறது.

இதனால், சித்தராமையாவுக்கு முதல்வர் பதவி வழங்கப்பட்டால், அதற்கு ஈடாக சிவகுமாரை சமாதானப்படுத்தி சரிகட்ட வேண்டிய அவசியம் கட்சிக்கு ஏற்படும். அதை அவர் ஏற்றுக்கொண்டு அவர் சமாதானம் அடைய வேண்டும். சிவகுமாருக்கு சுழற்சி முறையில் முதல்வர் பதவி வழங்குவதாக முடிவு செய்யப்பட்டால் அதுதான் பிரச்சினையில்தான் கொண்டுபோய் நிறுத்தும். கடந்த காலங்களில் சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தானில் காங்கிரஸ் முயன்று பார்த்த அந்தத் திட்டம் கைகொடுக்கவில்லை. ஆனால், அதை சித்தராமையா ஏற்றுக்கொள்ள வாய்ப்பில்லை.

கேரளா வந்த கப்பலில் ரூ.12,000 கோடி போதைப் பொருள் பறிமுதல்

Karnataka battle won, Congress now faces tough choice between Siddaramaiah & Shivakumar

கட்சியில் முதல்வர் யார் என்ற கடினமான முடிவை எடுக்கும் பொறுப்பு கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வசம் உள்ளது. அவர் தானே கூறிக்கொண்டது போல மண்ணின் மைந்தராகவும் அனுபவம் வாய்ந்த அரசியல் தலைவராகவும் இருப்பதால் இந்த விவகாரத்தை திறமையாகக் கையாண்டு முடிவெடுப்பார் என்று காங்கிரஸ் தொண்டர்கள் நம்பிக்கை வைத்துள்ளனர். ராகுல் காந்தி உட்பட அனைத்து தலைவர்களிடமும் ஆலோசனை நடத்தி அதன்படி முடிவு எடுப்பார் என எதிர்பார்க்கின்றனர்.

Karnataka Assembly Election 2023: தெளிவான தீர்ப்பு கொடுத்த கர்நாடக மக்கள்; பாஜக எங்கே சறுக்கியது?

Follow Us:
Download App:
  • android
  • ios