7 ஆம் தேதி வேணாம் ; 8 ஆம் தேதி கூட்டுவோம் - கர்நாடகா அறிவிப்பு
காவிரி விவகாரம் தொடர்பாக கர்நாடகாவில் 7-ம் தேதிக்கு பதில் 8-ம் தேதி அனைத்துக் கட்சி கூட்டம் என அறிவிக்கப்பட்டுள்ளது. நீர்வளத்துறை செயலாளர் தலைமையிலான கூட்டத்தில் பங்கேற்கவுள்ளதால் 8-ம் தேதி அனைத்துக் கட்சி கூட்டம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நூற்றாண்டுகள் கடந்து தொடர்ந்துவரும் காவிரி நதிநீர் பங்கீடு விவகாரத்தில், கடந்த மாதம் உச்சநீதிமன்றம் இறுதி தீர்ப்பை வழங்கியது. நடுவர் மன்றம் வழங்கிய நீரிலிருந்து 14.75 டிஎம்சி நீரை குறைத்து 177.25 டிஎம்சி நீரை தமிழகத்துக்கு ஒதுக்கி உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இது தமிழகத்திற்கு பாதிப்பாக இருந்தாலும், தமிழகம் வலியுறுத்திய காவிரி மேலாண்மை வாரியத்தை 6 வார காலத்திற்குள் அமைக்க வேண்டும் என மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கு முன் பலமுறை உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கவில்லை.
இதுதான் இறுதி தீர்ப்பு என்பதால், இந்த முறை அமைத்தாக வேண்டிய கட்டாயத்தில் மத்திய அரசு உள்ளது. இதற்கிடையே காவிரி இறுதி தீர்ப்பு தொடர்பாக தமிழக அரசு சார்பில், அனைத்து கட்சி கூட்டம் கூட்டப்பட்டு நடத்தப்பட்ட ஆலோசனையில் அனைத்து கட்சி பிரதிநிதிகளும் இணைந்து பிரதமரை நேரில் சந்தித்து காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்த முடிவு செய்யப்பட்டது.
இதையடுத்து நாங்களும் அனைத்து கட்சி கூட்டம் கூட்டுவோம் என்று கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா வரும் 7 ஆம் தேதியை முடிவு செய்தார்.
ஆனால் நாளை நீர்வளத்துறை செயலாளர் தலைமையிலான கூட்டம் நடைபெற உள்ளது. இதனால் கர்நாடகாவில் 7-ம் தேதிக்கு பதில் 8-ம் தேதி அனைத்துக் கட்சி கூட்டம் என அறிவிக்கப்பட்டுள்ளது