Kambala resumes in coastal Karnataka after a gap of a year
கர்நாடக மாநிலத்தின் கடற்கரை மாவட்டங்களில் பாரம்பரிய ‘கம்பளா எருமை மாட்டு’ பந்தயம் ஒரு ஆண்டு தடைக்கு பின் நேற்று தொடங்கியது.
தட்சின கர்நாடகத்தில் உள்ள மூட்பித்ரி எனும் இடத்தில் நேற்று கம்பளா போட்டி நடந்தது.
‘கம்பளா எருமை மாட்டு பந்தயம்’ கர்நாடகத்தின் கடற்கரை மாவட்டங்களில் பாரம்பரியமாக நடத்தப்பட்டு வரும் போட்டியாகும். எருமைகளை பூட்டி சேற்றில் ஓடவிட்டு போட்டி நடத்தப்படும். இப்போட்டிக்கு மிகப்பெரிய வரவேற்பு அப்பகுதி மக்களிடையே உண்டு.
இந்நிலையில், கம்பளா விளையாட்டில் எருமை மாடுகள் துன்புறுத்தப்படுகின்றன என்று பீட்டா விலங்குகள் நல அமைப்பு கர்நாடக உயர் நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு வழக்கு தொடர்ந்தது. இதை ஏற்று கடந்த 2016ம் ஆண்டு நவம்பர் மாதம் போட்டி நடத்த உயர் நீதிமன்றம் தடை விதித்தது. இதனால், வழக்கமாக நடக்கும் கம்பளா போட்டி கடந்த ஆண்டு நடத்தப்படவில்லை.
இதையடுத்து, கம்பளா போட்டியை நடத்தும் வகையில், கர்நாடக அரசு விலங்குகள் வதைச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்து, கடந்த ஜூலை மாதம் அவசரச் சட்டமாக நிறைவேற்றியது. இந்த சட்டத்தின் ஆயுள் காலம் 2018, ஜனவரி 20ந்தேதி வரை இருக்கிறது.
இந்த அவசரச்சட்டத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த பீட்டா அமைப்பு, கம்பளா போட்டியை நடத்த தடை கோரி மனுத்தாக்கல் செய்தது. இந்த மனுவை விசாரணை செய்த உச்ச நீதிமன்றம் தடை விதிக்க மறுத்து அடுத்த கட்ட விசாரணையை 13-ந்தேதிக்கு ஒத்திவைத்தது.
இதையடுத்து, மூட்பித்ரி எனும் இடத்தில் உள்ள கடலக்கேரி பகுதியில் 24 மணிநேர கம்பளா எருமைமாட்டுப் போட்டி நேற்று தொடங்கியது. முதல்கட்டமாக 19 எருமைமாட்டு ஜோடிகள் கலந்து கொண்டன.
தட்சின கன்னடா மற்றும் உடுப்பி ஜோடுகரே கம்பளா குழுவினர், மூட்பித்ரி எம்.எல்.ஏ. கே. அபிஹயசந்திர ஜெயின் ஆகியோர் கலந்து கொண்டு போட்டியை தொடங்கி வைத்தனர். கடந்த ஒரு ஆண்டு இடைவெளிக்கு பின் மீண்டும் கம்பளா போட்டி நடந்துள்ளது அப்பகுதி மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
