judge karnan asking 14 crores

தனக்கு மன உளைச்சல் ஏற்படுத்தியதற்காக 14 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணன் கடிதம் எழுதியுள்ளார்.

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த கர்ணன் கடந்த ஆண்டு , கல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதியாக இடமாற்றம் செய்யப்பட்டார்.

இவர் சென்னையில் பணியாற்றிய போது சென்னை நீதிபதிகள் குறித்து பிரதமர் அலுவலகம், சட்டத்துறை அமைச்சகம், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி உள்ளிட்டோருக்கு புகார் கடிதங்களை அனுப்பினார்.

இதனை உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்காக பதிவு செய்து விசாரணை செய்து வருகிறது. இந்த வழக்கில் உச்சநீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று கர்ணனுக்கு இரண்டு முறை உத்தரவிடப்பட்டது. ஆனால், நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.

இந்நிலையில், இந்த கடந்த 10ம் தேதி தலைமை நீதிபதி கேஹர் மற்றும் நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, செலமேஸ்வர், ரஞ்சன் கோகாய், மதன் பி லோகூர், பினாகி சந்திரகோஸ், குரியன் ஜோசப் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது கர்ணனுக்கு எதிராக ஜாமினில் வெளிவர முடியாத வாரன்ட் பிறப்பித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த நீதிபதி கர்ணன், உந்நநீதிமன்றத்துக்கு எதிராக உத்தரவு பிறப்பிப்பேன் எனக்கூறினார்.

இந்நிலையில், உச்சநீதிமன்ற நீதிபதி மற்றும் அரசியல்சாசன பெஞ்சிற்கு கர்ணன் கடிதம் எழுதியுள்ளார். அதில் நீதிபதிகள் தனக்கு மன உளைச்சல் ஏற்படுத்தியதற்காகவும், பொது மக்கள் முன்னிலையில் அவமானப்படுத்தியதற்காகவும் இழப்பீடாக 14 கோடி ரூபாய் தர வேண்டும். என்றும் நீதிபதி கர்ணன் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.