முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ‘ஜியோ’ இலவச அழைப்புகளுக்கு தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) அனுமதி அளித்துள்ளது.
முகேஷ் அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் ‘ஜியோ’ நிறுவனம், இலவச கால்கள், இலவச இன்டர்நெட் சேவை எனப் பல்வேறு அறிவிப்புகளுடன் 4ஜி சேவையை கடந்த மாதம் தொடங்கியது. மேலும், வாடிக்கையாளர்களுக்கு வாழ்நாள் முழுதும் இலவச கால்களை வழங்குவதாகவும் தெரிவித்திருந்தது.

ஆனால் ஏர்டெல், வோடபோன் உள்ளிட்ட செல்போன் சேவை நிறுவனங்கள், கட்டண விதிகளை ஜியோ மீறுவதாக டிராய் அமைப்பிடம் புகார் செய்தன. இந்த புகாரை ஆய்வுசெய்த டிராய், ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தினுடைய இலவச சலுகைக்கு 90 நாட்கள் மட்டுமே அனுமதி வழங்க முடியும் என்று கூறியுள்ளது.
ரிலையன்ஸ் ஜியோ டிராய் அமைப்பிடம் தாக்கல் செய்த கட்டண திட்டத்தில் வாழ்நாள் முழுதும் இலவச அழைப்பு வழங் கப்படும் என்று தெரிவிக்க வில்லை. கட்டண திட்டத்தில் ஒரு விநாடிக்கு 2 பைசா என்று குறிப்பிட்டு இருக்கிறது.

டிராய் அனுமதி வழங்கியதை ரிலையன்ஸ் நிறுவனம் வர வேற்றுள்ளது. இது குறித்து அந்த நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பில், “ ஜியோ நிறுவனம் வெளியிட்ட அனைத்து கட்டண முறைகளும் டிராயின் விதிமுறைகளுக்கு உட்பட்டுத்தான் உள்ளது என டிராயின் உத்தரவு தெளிவாக்க காட்டுகிறது. ஆதலால் ஜியோ நிறுவனத்தின் இலவச கால், இலவச எஸ்.டி.டி. ரோமிங் அனைத்தும் தொடரும்'' எனத் தெரிவித்துள்ளது.

மேலும் டிசம்பர் 3-ம் தேதிக்கு முன்பாக சிம்கார்டு வாங் கியவர்கள், இலவச அழைப்புகள் மற்றும் இண்டர்நெட் இணைப்பு சேவையை வரும் டிசம்பர் 31-ம் தேதி வரை பயன்படுத்தலாம் என்று தெரிவித்துள்ளது.
