காத்து வாக்குல ரெண்டு காதல் (கல்யாணம்).. ஒரே மேடையில் இரு பெண்களை திருமணம் செய்த வாலிபர்!
இந்த விவகாரத்திற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. அதன் பின் கிராம மக்கள் முஎ்னிலையில் பஞ்சாயத்து நடைபெற்றது.
இந்தியாவில் திருமணத்திற்கு மீறிய உறவு மற்றும் அதன் காரணமாக நிகழும் குற்ற சம்பவங்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே தான் இருக்கிறது. காதல் திருமணம் மற்றும் அதனால் ஏற்படும் பிரச்சினைகள் குறித்தும் ஏராளமான சம்பவங்கள் அரங்கேறுவது வாடிக்கையாகி விட்டது.
இந்த நிலையில், தான் சினிமா கதைகளை மிஞ்சும் வகையிலான சம்பவம் ஜார்கண்ட் மாநிலத்தில் அரங்கேறி இருக்கிறது. இந்த மாநிலத்தை சேர்ந்த வாலிபர் இரண்டு பெண்களை காதலித்து, இருவரையும் ஒரே மேடையில் வைத்து திருமணம் செய்து கொண்டுள்ளார்.
இரண்டு காதல்:
சந்தீப் ஓராவன் என்ற நபர் ஜார்க்கண்ட் மாநிலத்தின் லோஹர்டகாவை அடுத்த பாண்டா கிராமத்தில் வசித்து வருகிறார். இவர் கடந்த மூன்று ஆண்டுகளாக குசும் லக்ரா என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். இவர்களது காதல், ஒன்றாக சேர்ந்து வாழும் வரை தொடர்ந்தது. இதன் காரணமாக இவர்கள் இருவருக்கும் குழந்தை பிறந்தது.
இதனிடையே ஓராண்டுக்கு முன் சந்தீப் ஓராவன் மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள செங்கல் சூளை ஒன்றில் பணியாற்ற சென்றார். இவர் வேலைக்கு சேர்ந்த அதே செங்கல் சூலையில், சுவாதி குமாரி என்ற பெண்ணும் வேலைக்கு சேர்ந்து இருக்கிறார். இருவரும் வேலை செய்யும் இடத்தில் பழக துவங்கினர். இவர்களது பழக்கம் காதலாக மாறியது. இந்த காதல் அவர்களின் குடும்பத்தார் மற்றும் கிராமத்தினருக்கும் தெரியவந்தது.
பஞ்சாயத்து:
இந்த விவகாரத்திற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. அதன் பின் கிராம மக்கள் முஎ்னிலையில் பஞ்சாயத்து நடைபெற்றது. இதில் அந்த சந்தீப் ஓராவன் இரண்டு பெண்களையும் திருமணம் செய்து கொள்ளலாம் என்ற தீர்ப்பு முடிவானது. இந்த திருமணத்திற்கு இரு பெண்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தார் யாரும் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை.
இதன் காரணமாக நடைமுறையில் இல்லாத நிலையிலும், இந்த திருமணம் நடந்து முடிந்தது. இரண்டு பெண்களை ஒன்றாக திருமணம் செய்து கொண்டதில் சட்ட சிக்கல்கள் ஏற்பட்டு இருக்கலாம். ஆனால், இவர்கள் இருவரையும் நான் காதலிக்கிறேன். இவர்களில் ஒருவரையும் என்னால் விட்டு விட முடியாது என சந்தீப் ஓராவன் தெரிவித்தார்.