ஜெட்லியின் மேதாவித்தனமும், மோடியின் பிளவு அரசியலுமே பொருளாதார வீழ்ச்சிக்கு காரணம் - ராகுல் காந்தி கடும் சாடல்
நாட்டின் பொருளாதார வீழ்ச்சிக்கு பிரதமர் மோடியின் ஒட்டுமொத்த பிளவுபடுத்தும் அரசியலும், மத்திய நிதி அமைச்சர் ஜெட்லியின் மேதாவித்தனமும் காரணம் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கிண்டல் செய்துள்ளார்.
வளர்ச்சி குறையும்
மத்திய புள்ளியல் துறை நேற்று முன்தினம் நாட்டின் பொருளாதார வளர்ச்சி அல்லது மொத்த உள்நாட்டு உற்பத்தி(ஜி.டி.பி.) குறித்த அறிக்கையை வெளியிட்டது. அதில் 2017-18ம் நிதி ஆண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 6.5 சதவீதமாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது கடந்த 4 ஆண்டுகளில் இல்லாத அளவு குறைவாகும். கடந்த ஆண்டு பொருளாதார வளர்ச்சி 7.1 சதவீதமாக இருந்ததும் குறிப்பிடத்தக்கது.
ராகுல் கிண்டல்
இது குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி டுவிட்டரில் கடுமையாக விமர்சனம் செய்து, கிண்டல் செய்துள்ளார். அவர் கூறியதாவது-
முதலீடு, வேலைவாய்ப்பு குறைந்தது
கடந்த 13 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு புதிய முதலீடுகள் குறைந்துள்ளது, 63 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வங்கிகளின் கடன் வழங்கும் அளவு குறைந்துள்ளது, 8 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நாட்டில் வேலைவாய்ப்பு உருவாக்கம் சரிந்துள்ளது. வேளாண் வளர்ச்சி 1.7 சதவீதம் வீழ்ச்சி அடைந்துள்ளது.
அதிகரிப்பு
மொத்த வருவாய்க்கும், செலவுக்கும் இடையிலான இடைவெளியான நிதிப்பற்றாக்குறை அளவு கடந்த 8 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்லது. பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் செயல்படுத்தப்படாமல் தேங்கிக்கடக்கின்றன.
காரணம்
மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லியின் மேதாவித்தனமும், பிரதமர் மோடியின் ஒட்டுமொத்த பிளவு படுத்தும் அரசியலும்தான் நாட்டின் பொருளாதார வீழ்ச்சிக்கு காரணம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
ஜி.டி.பி.க்கு புதிய விளக்கம்...
பொருளாதாரத்தில் ஜி.டி.பி.(Gross Domestic Product) என்பது மொத்த உள்நாட்டு உற்பத்தியாகும். ஆனால், இதற்குராகுல் காந்தி , பிரதமர் மோடியை வைத்து புதிய விளக்கம் கொடுத்துள்ளார். ஜி.டி.பி. என்பதற்கு ‘கிராஸ் டிவைசிவ் பாலிக்டிக்ஸ்’ (ஒட்டுமொத்த பிளவு அரசியல்) என்று விளக்கம் கொடுத்துள்ளார். ஏற்கனவே ஜி.எஸ்.டி. வரிக்கு கப்பார் சிங் டேக்ஸ்(மக்களிடம் இருந்து கொள்ளையடிக்கும் வரி)என்று குறிப்பிட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.