JEE Main தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கியதாக தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.
JEE Main தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கியதாக தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. IIT, NIT, IIIT போன்ற மத்திய உயர்கல்வி நிறுவனங்களில் இளநிலை படிப்புகளில் சேர JEE எனப்படும் ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இவை JEE முதல்நிலைத் தேர்வு, பிரதானத் தேர்வு என இரண்டு கட்டங்களாக NTA எனப்படும் தேசிய தேர்வு முகமை சார்பில் ஆண்டுதோறும் நடத்தப்படும். இதில் முதல்நிலைத் தேர்வு ஆண்டுக்கு 4 முறை நடைபெற்று வந்த நிலையில், 2022-23 ஆம் கல்வியாண்டில் இருந்து 2 கட்டங்களாக தேர்வு நடத்தப்பட உள்ளதாக தேசிய தேர்வு முகமை ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி இந்தாண்டுக்கான முதல்கட்ட தேர்வு ஏப்ரல் 21 முதல் மே 4 ஆம் தேதி வரையும், 2 ஆம் கட்ட தேர்வு மே 24 முதல் 29 ஆம் தேதி வரையும் நடைபெறும் என தேசிய தேர்வு முகமை முன்னர் அறிவித்திருந்தது.

இதனிடையே முதன்மை தேர்வை தள்ளி வைக்க வேண்டும் என தேர்வர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். அதனை ஏற்று JEE முதன்மை தேர்வை 2 மாதங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்டு ஏப்ரல், மே மாதங்களில் நடைபெறவிருந்த தேர்வு ஜூன், ஜூலைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. முதற்கட்ட JEE Main தேர்வு ஜூன் 20 முதல் 29 வரை நடைபெறும் எனவும், 2 ஆம் கட்ட JEE Main தேர்வு ஜூலை 21 முதல் 30 வரை நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் JEE Main தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு மீண்டும் துவங்கியுள்ளதாக தேசிய தேர்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி, வரும் ஜூன் 20 முதல் 29 வரை நடைபெற உள்ள JEE Main தேர்வுக்கு, இன்று முதல் வரும் 25 ஆம் தேதி வரை https://jeemain.nta.nic.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு தேதி ஒத்திவைக்கப்பட்ட நிலையில், மாணவர்களின் கோரிக்கையை ஏற்று ஆன்லைன் விண்ணப்ப பதிவு மீண்டும் துவக்கப்பட்டுள்ளது. இதை அடுத்து தேர்வுக்கு விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பங்களை ஏப்ரல் 25 ஆம் தேதி இரவு 9 மணி வரை சமர்ப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
