முதலமைச்சர் ஜெயலலிதா மறைவையொட்டி புதுச்சேரியில் இன்று கடைகள் அடைக்கப்பட்டன. பஸ்கள், ஆட்டோக்கள் ஓடவில்லை. இதனால் புதுவை நகரம் வெறிச்சோடிக் காணப்படுகிறது.

முதலமைச்சர் ஜெயலலிதா உடலுக்கு, திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அப்போது, ஜெயலலிதா ஒவ்வொரு நிலையிலும் தனி முத்திரையைப் பதித்தவர் என கூறினார்.

கடந்த செப்டம்பர் மாதம் 22ம் தேதி முதலமைச்சர் ஜெயலலிதா, ஆயிரம் விளக்கு அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்துவந்த நிலையில், நேற்று இரவு 11.,30 மணியளவில் அவர் சிகிச்சை பலனின்றி காலமானார்.

இதையடுத்து அவரது உடல் போயஸ் கார்டனில் உள்ள அவரது வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டது. பின்னர், அங்கிருந்து சென்னை அண்ணா சாலையில் உள்ள ஓமந்தூரார் தோட்டத்தில¢ உள்ளராஜாஜி அரங்கில் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் புதுச்சேரி முழுவதும் கடைகள் அடைக்கப்பட்டன. பஸ்கள், லாரிகள், ஆட்டோக்கள் இயங்கவில்லை.

குறிப்பாக முக்கிய கடைவீதிகளான நேரு வீதி, காந்தி வீதி, அண்ணா சாலை, பெரிய மார்க்கெட், முதலியார்பேட்டை, முத்தியால்பேட்டை, நெல்லித்தோப்பு, லாஸ்பேட்டை, வில்லியனூர் பகுதிகளில் இருந்த மார்க்கெட்டுகள், பாகூர், திருக்கனூர், காலாப்பட்டு என புறநகர்ப்பகுதிகளிலும் கடைகள் முழுமையாக அடைக்கப்பட்டுள்ளன.

அதேபோல், முதல்வர் ஜெயலலிலா மறவையொட்டி, புதுச்சேரி நகரில் பள்ளிகள், கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டது. வாகனப் போக்குவரத்து குறைவாக இருந்ததால் முக்கிய சாலைகள் வெறிச்சோடிக் காணப்பட்டன. பல்வேறு பகுதிகளில் முதல்வர் ஜெயலலிதா படங்களை வைத்து அதிமுகவினர், பொதுமக்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.