ராணுவ உதவி கேட்டால் அளிக்க தயார் – கிரண் ரெஜ்ஜு பேட்டி
கடந்த செப்டம்பர் 22ம் தேதி முதல் சென்னை அப்பல்லோ மருத்துவனையில் சிகிச்சை பெற்று வந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு நேற்று மாலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இரவு 8 மணி முதல் இன்று அதிகாலை 3 மணி வரை ஜெயலலிதாவுக்கு எவ்வித சிகிச்சையும் அளிக்கப்படவில்லை. சிறு அறுவை சிகிச்சை சற்று முன் முடிந்தது.
முதல்வரின் உடலில் ஏற்படும் எதிர்வினையைப்பொறுத்து அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு ஆஞ்ஜியோ சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இதயநாளத்தில் உள்ள அடைப்பை அறுவை சிகிச்சையின்றி சரிசெய்யக்கூடியது ஆஞ்ஜியோ ஆகும்.
முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு நேற்று மாலை மாரடைப்பு ஏற்பட்ட சற்று நேரத்தில், அனைத்து ஊடகங்களிலும் வெளியானதால், தமிழகம் முழுவதும் உள்ள அதிமுக தொண்டர்கள் அதிர்ச்சியடைந்தனர். பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான தொண்டர்கள் அப்பல்லோ மருத்துவமனை முன் திரண்டுள்ளனர்.
முதலமைச்சர் உடல்நிலை பாதிக்கப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால், பெரும் பதற்றம் நிலவி வருகிறது. இதையடுத்து பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும் என கருதப்படுகிறது.
இந்நிலையில், சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டுமானால், தமிழக அரசு கேட்டுக் கொண்டால் மத்திய அரசு ராணுவத்தை அனுப்பி உதவுவதற்கு தயாராக உள்ளது என்று உள்துறை இணையமைச்சர் கிரண் ரிஜிஜூ டெல்லியில் பேட்டி அளித்துள்ளார்.