தீவிரவாதிகள் தாக்குதலில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களின் இறுதிச்சடங்கு : ஆயிரக்கணக்கானோர் அஞ்சலி!
ஜம்முவில் Nagrota ராணுவ முகாமில் நிகழ்த்தப்பட்ட தீவிரவாதத் தாக்குதலில் வீர மரணம் அடைந்த இந்திய ராணுவ வீரர்களின் இறுதிச்சடங்கு இன்று நடைபெற்றது.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் Nagrota பகுதியில் அமைந்துள்ள ராணுவ முகாமில், நேற்று முன்தினம் அதிகாலை சீருடையில் வந்த 3 தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில், 2 அதிகாரிகள் உட்பட இந்திய ராணுவத்தினர் 7 பேர் வீர மரணம் அடைந்தனர். பாதுகாப்புப் படையினர் நடத்திய எதிர்த்தாக்குதலில் 3 தீவிரவாதிகளும் சுட்டுக்கொல்லப்பட்டனர். ஜம்முவின் Chamliyal பகுதியில் சர்வதேச எல்லைக்கோடு அருகே சுரங்கம் அமைத்து தீவிரவாதிகள் ஊடுருவியிருப்பது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தீவிரவாதத் தாக்குதலில் வீரமரணம் அடைந்த இந்திய ராணுவத்தைச்சேர்ந்த ஹவில்தார் Sukhraj Singh-ன் இறுதிச்சடங்கு பஞ்சாப் மாநிலம் Batala-வில் இன்று நடைபெற்றது. ராணுவ வீரர்களின் அணிவகுப்பு மரியாதையுடன் நடைபெற்ற இந்த இறுதிச்சடங்கு நிகழ்ச்சியில், ராணுவ உயரதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள், ஏராளமான பொதுமக்கள் உட்பட திரளானோர் பங்கேற்று தங்களது இறுதிமரியாதையை செலுத்தினர்.
மஹாராஷ்ட்ரா மாநிலம் பந்தர்பூரைச் சேர்ந்த மேஜர் கோசாவி குணால் மணதீரின் இறுதிச் சடங்கு நிகழ்ச்சியும் இன்று நடைபெற்றது. துப்பாக்கிக் குண்டுகள் முழங்க உரிய ராணுவ மரியாதையுடன் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் ராணுவ உயரதிகாரிகள், காவல்துறையினர், பொதுமக்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இதேபோல், கர்நாடகா மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்த மேஜர் Akshay Girish Kumar-ன் உடல் எலஹங்கா விமானப்படை நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது. அவரது இறுதிச்சடங்கு இன்று பெங்களூருவில் நடைபெறுகிறது.