ஹிமாச்சல் முதல்வராகப் பதவி ஏற்றார் ஜெய்ராம் தாக்குர்: நேரில் வாழ்த்திய மோடி
ஹிமாசலப் பிரதேச முதல்வராக ஐந்து முறை எம்.எல்.ஏ.,வாக இருக்கும் பாஜக.,வின் ஜெய்ராம் தாக்குர் புதன்கிழமை இன்று பதவி ஏற்றுக் கொண்டார். அவருக்கு ஆளுநர் ஆச்சர்யா தேவரத் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
ஹிமாச்சலப் பிரதேசத்தில் அண்மையில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் பாஜக., பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற்றது. இதை அடுத்து, வெற்றி பெற்ற சட்ட மன்ற உறுப்பினர்களால் அம்மாநில முதல்வராக ஜெய்ராம் தாக்குர் தேர்வு செய்யப் பட்டார்.
இந்நிலையில், புதன்கிழமை இன்று முதலமைச்சராக பா.ஜ.க.வின் ஜெய்ராம் தாக்கூர் பதவியேற்றுக்கொண்டார். இந்தப் பதவியேற்பு விழாவில் பங்கேற்க வந்த பிரதமர் மோடியை சிம்லா விமான நிலையத்துக்குச் சென்று ஜெய்ராம் தாக்குர் வரவேற்றார். பின்னர் சிம்லாவில் உள்ள ரிட்ஜ் மைதானத்தில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் ஜெய்ராம் தாக்குருக்கு முதலமைச்சராக ஆளுநர் ஆச்சார்ய தேவ்விரத் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.
முதல்வராகப் பதவியேற்ற ஜெய்ராம் தாக்குருடன் 10 அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர்.
இந்தப் பதவியேற்பு விழாவில் பா.ஜ.க. தலைவர் அமித் ஷா, மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், நிதின் கட்காரி, பா.ஜ.க. ஆளும் மாநில முதல்வர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.