கர்நாடக அமைச்சர் சிவகுமார் வீடு, அலுவலகங்களில் 2ஆவது நாளாக அதிரடி ரெய்டு…முக்கிய ஆவணங்கள் சிக்கியது!!
கர்நாடக மின் துறை அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான, டி.கே.சிவகுமாருக்கு, சொந்தமான வீடு, அலுவலகம், டில்லி மற்றும் கர்நாடகாவில் உள்ள, 62 இடங்களில், வருமான வரித் துறையினர் இரண்டாவது நாளாக இன்றும் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
கர்நாடக மின்துறை அமைச்சர் சிவகுமார், பெங்களூருக்கு அருகே உள்ள சொகுசு விடுதியில் தங்கியுள்ள, குஜராத்தைச் சேர்ந்த, 44 காங்கிரஸ், எம்எல்ஏக்களுக்கு தேவையான வசதிகளை செய்து தருகிறார் என கூறப்படுகிறது.
இதனால் அவரை பழிவாங்கும் விதமாக சிவகுமாரின் வீடு, அலுவலகம், சொகுசு விடுதி போன்றவற்றில் வருமான வரித்துறையினர் நேற்று அதிரடியாக ரெய்டு நடத்தினர்.சிவகுமார் மீதான இந்த நடவடிக்கை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சிவகுமாரின் வீட்டில் நேற்று காலை 7 மணிக்கு துவங்கிய சோதனை விடிய விடிய நடந்தது. இதில் 11 கோடி ரூபாய் அளவிற்கு கணக்கில் வராத பணம் கைப்பற்றப்பட்டதாக வருமான வரித்துறையினர் தெரிவித்தனர்.
இந்நிலையில் 2வது நாளாக இன்றும் அமைச்சர் சிவக்குமாரின் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
சிவக்குமாரின் வீடு மற்றும் அலுவலகங்களில் இதுவரை நடத்தப்பட்ட சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் சிக்கி உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இது தொடர்பாக அமைச்சர் சிவக்குமாரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இதே போல் சிவகுமாரின் சகோதரரும், மக்களவை உறுப்பினருமான டி.கே.சுரேஷின் வீடு மற்றும் அலுவலகங்கள் உள்ளிட்ட 62 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.