இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான ‘இஸ்ரோ’ பி.எஸ்.எல்.வி சி 37- ராக்கெட் மூலம் ஒரே நேரத்தில் 104 செயற்கைக்கோள்களை நேற்று விண்ணில் செலுத்தி வெற்றிகரமாக நிலை நிறுத்தியது.
இதில் இஸ்ரோவின் சார்பில் வானிலை ஆய்வுக்கான கார்டோசாட்-2 செயற்கைகோள்களும், 103 நானோ செயற்கைக்கோள்களும் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டன.
இஸ்ரோ
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ செயற்கைக் கோள்கள் மற்றும் அவற்றை விண்ணில் செலுத்தப் பயன்படும்ராக்கெட்களையும் தயாரித்து வருகிறது. உள்நாட்டு செயற்கைக் கோள்கள் மட்டுமல்லாமல் வெளிநாடுகளின் செயற்கைக் கோள்களையும் வர்த்தக நோக்கில் இஸ்ரோ விண்ணில் செலுத்தி வருகிறது.

கவுன்ட்டவுன்
ஆந்திர மாநிலம் ஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் முதலாவது ஏவுதளத்தில் இருந்து பிஎஸ்எல்வி - சி37 ராக்கெட் மூலம் 104 செயற்கைக் கோள்கள் நேற்று காலை 9.28 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது. இதற்கான 48 மணி நேர கவுன்ட்டவுன்திங்கள்கிழமை காலை 9.28 மணிக்கு தொடங்கியது.
104 செயற்கைக்கோள்கள்
இந்தியாவின் கார்டோசாட்-2 சீரிஸ் செயற்கைக்கோள், இஸ்ரோவின் ஐஎன்எஸ்-1ஏ, ஐஎன்எஸ் 1-பி என இரு செயற்கைக்கோள்கள், 2 அமெரிக்க நிறுவனங்களுக்கு சொந்தமாந 96 நானோ செயற்கைக்கோள்கள், இஸ்ரேல், கஜகஸ்தான், நெதர்லாந்து, சுவிட்சர்லாந்து, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளுக்குச் சொந்தமான 5 நானோ செயற்கைக்கோள் என மொத்தம் 104 செயற்கைக் கோள்களை பிஎஸ்எல்விராக்கெட் சுமந்து சென்றது.
714 கிலோ எடை
இதில் கார்டோசாட்-2 சீரிஸ் செயற்கைக்கோளின் எடை 714 கிலோ ஆகும். இந்த செயற்கைக்கோளின் ஆயுள் காலம் 5 ஆண்டுகள் ஆகும். இந்திய நிலப்பகுதியை படம்பிடித்தும், கடல்பகுதி எல்லைகள், சாலை எல்லைகள் கண்காணிப்பு உள்ளிட்ட பணிகளுக்கு இந்த செயற்கைக்கோள் பயன்படுத்தப்படும்.

96 நானோ
ஒவ்வொரு நானோ செயற்கைக்கோள்களும் 5 முதல் 10 கிலோ எடை இருக்கும், இவை அனைத்தும் புவி சுற்றுவட்டப்பாதையில் இருந்து 505 கி.மீ தொலைவில் நிலைநிறுத்தப்பட்டது.
புதிய உலகசாதனை
இதற்கு முன் ரஷியா விண்வெளி அமைப்பு கடந்த 2014ம் ஆண்டு அதிக பட்சமாக 37 செயற்கைக்கோள்களை ஒரே நேரத்தில் விண்ணில் செலுத்தி இருந்தது இதுதான் உலகசாதனையாக இருந்து வந்தது. ஆனால், அதற்குபின் அந்த சாதனையை இஸ்ரோ முறியடித்து, 104 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தி புதிய உலக சாதனையை படைத்துள்ளது.
இதுவரை
இதற்கு முன், இஸ்ரோ ஒரே நேரத்தில் அதிகபட்சமாக கடந்த 2015ம் ஆண்டு 20 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தி இருந்தது. ஒட்டுமொத்தமாக இதுவரை இஸ்ரோ 226 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தி இருக்கிறது. இதில் 179 வெளிநாடுகளைச் சேர்ந்தவைகள் என்பது குறிப்பிடத்தக்கது.
பாக்ஸ் மேட்டர்
புதிய சாதனை
இஸ்ரோவின் தலைவர் ஏ.எஸ். கிரண் குமார் கூறுகையில், “ பி.எஸ்.எல்.வி. சி.37- ராக்கெட் மூலம் ஏவப்பட்ட 104 செயற்கைக்கோள்களும் புவி சுற்று வட்டப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டுள்ளன. ஒட்டுமொத்த இஸ்ரோ குழுவும் சிறப்பாக பணியாற்றி உள்ளதற்கு, வாழ்த்துக்கள். செயற்கைக்கோள்களின் ஒட்டுமொத்த எடை 1378 கிலோ ஆகும்.
இதில் 77 செயற்கைக்கோள்கள் ஏற்கனவே தகவல்களையும், சமிக்ஞைகளையும் அனுப்பத் தொடங்கிவிட்டன. இதுவரை ஒட்டுமொத்தமாக இஸ்ரோ 226 செயற்கைக்கோள்களை அனுப்பி இருக்கிறது. இதில் 179 வெளிநாடுகளைச் சேர்ந்தவை. எங்களுக்கு இது மிகச்சிறந்த அனுபவமாகும். '' எனத் தெரிவித்தார்.
