International Yoga Day 2022: சர்வதேச யோகா தினம் 2022 - ‘தீம்’ என்னவென்று தெரியுமா ? இதுதான் !!
International Yoga Day 2022 : இந்தியாவில் பிரதமர் நரேந்திர மோடியால் இந்த தினம் தொடங்கப்பட்டது. ஜூன் 21ம் தேதி அன்று யோகா தினம் நடத்த ஒரு சிறப்பு காரணம் இருக்கிறது.
இந்த தேதி வடக்கு அரைக்கோளத்தில் மிக நீண்ட நாள் என்பதால் இது ஒரு குறிப்பிட்ட முக்கியத்துவம் வாய்ந்த நாளாக இருக்கிறது. கடந்த 2015-ம் ஆண்டு முதல் ஐ.நா. சபையால் உலகம் முழுவதும் ஜூன் 21-ந்தேதி சர்வதேச யோகா தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அன்றைய நாளில் ஏராளமான பொது மக்களுடன் இணைந்து யோகாசன பயிற்சி மேற்கொள்வதை பிரதமர் மோடி வழக்கமாக கொண்டுள்ளார். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா கட்டுப்பாடுகளால் யோகாசன நிகழ்ச்சிகள் நடத்தப்படவில்லை.
இந்த ஆண்டு 75-வது சுதந்திர ஆண்டும் ஓராண்டுக்கு கொண்டாடப்பட்டு வருவதால் அதையொட்டி யோகான தினத்தை சிறப்பாக கொண்டாட திட்டமிடப்பட்டு உள்ளது. அதன்படி நாட்டில் உள்ள முக்கியமான 75 இடங்களில் யோகான தினத்தின் போது பலதரப்பு மக்களும் கூட்டாக பங்கேற்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. கர்நாடக மாநிலம் மைசூரில் நடைபெறும் யோகாசன பயிற்சியில் பிரதமர் மோடி மக்களுடன் இணைந்து யோகாசன பயிற்சிகளை மேற்கொள்ள இருக்கிறார்.
இது தவிர ஜூன் 21-ந்தேதியில் இருந்து 25 நாள் முன்பாகவே சர்வதேச யோகா தின ‘கவுன்டவுன்’ தொடங்குகிறது. இதன்படி வருகிற 27-ந்தேதி ஐதராபாத்தில் 10 ஆயிரம் பேர் பங்கேற்கும் யோகா தின நிகழ்ச்சி நடைபெற உள்ளது. யோகா தினத்தின் போது பல்வேறு நாடுகளில் உள்ள இந்திய தூதரகங்களில் இணைய வழியில் தொடர் யோகா பயிற்சிகளை மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி சுமார் 70 நாடுகளில் உள்ளூர் நேரப்படி காலை 6 மணிக்கு தொடங்கி கூட்டு யோகா தொடர் பயிற்சி நடைபெற உள்ளது. இதில் மத்திய மந்திரிகள், திரைத்துறை பிரபலங்கள், விளையாட்டு வீரர், வீராங்கனைகள், யோகாசன நிபுணர்கள், ஆர்வலர்கள் என பலர் பங்கேற்க உள்ளனர். இதன் மூலம் இந்தியாவின் புகழை சர்வதேச அளவில் மேலும் உயர்த்த முடியும் என்று மத்திய ஆயுஷ் துறை மந்திரி சர்வானந்த சோனோவால் தெரிவித்துள்ளார்.
2022ம் ஆண்டுக்கான கருப்பொருள் (Theme) அதாவது தீம் என்னவென்றால், மனிதகுலத்திற்கான யோகா என்பதை மையமாக கொண்டு கொண்டாடப்படும் என்று கூறப்பட்டுள்ளது. கொரோனா தொற்று (கோவிட்-19) தொற்றுநோயின் உச்சக்கட்டத்தின் போது, துன்பங்களைத் தணிப்பதில் யோகா எவ்வாறு மனிதகுலத்திற்கு சேவை செய்தது என்பதை சித்தரிக்கும் வகையில் இந்த கருப்பொருளை கொண்டுள்ளது.