திருமண உறவில் மூன்றாவது நபர் தலையிடுவது சட்டவிரோதம்! உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
திருமண உறவில், மூன்றாவது நபர் தலையிடுவது சட்டவிரோதமானது என்று உச்சநீதிமன்றம் பரபரப்பான தீர்ப்பை வெளியிட்டுள்ளது.
வட மாநிலங்களில் சட்டத்துக்குப் புறம்பாக காப் பஞ்சாயத்து எனும் கட்டப்பஞ்சாயத்து முறை வழக்கத்தில் உள்ளது. திருமணம் முடிந்த தம்பதிக்கு எதிராக
கடைப்பிடிக்கப்படும் கொள்கைகளைக் கொண்ட காப் பஞ்சாயத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரி, சக்தி வாஹினி என்ற தொண்டு நிறுவனம், உச்சநீதிமன்றத்தில்
மனு ஒன்றை தாக்கல் செய்தது. கட்டப்பஞ்சாயத்தால்தான், ஆணவக் கொலைகள் நடப்பதாக தொண்டு நிறுவனம் குற்றம் சாட்டியிருந்தது.
இந்த மனு மீதான விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டது. இந்த மனுவை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மற்றும் நீதிபதிகள்
ஏ.எம்.கன்வில்கர், சந்திரசூட் ஆகிய 3 பேர் கொண்ட அமர்வு விசாரித்தது.
விசாரணை முடிவில், திருமண உறவில் மூன்றாவது நபர் தலையிட்டு கட்டப்பஞ்சாயத்து செய்வது சட்டவிரோதமான செயல் என்று தீர்ப்பளிக்கப்பட்டது. திருமணத்துக்கு
எதிராக எந்தவொரு சட்டவிரோத முறையில் கட்டப்பஞ்சாயத்துக்கள் நடத்துவதற்கு அனுமதி இல்லை என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்தது.
கட்டப்பஞ்சாயத்துக்களை ஒழிக்க மாநில அரசுகள்தான் சட்ட விதிகளை உருவாக்க வேண்டும் என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். ஆணவ
படுகொலைகளைத் தடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரிய மனுவை உச்சநீதிமன்ற நீதிபதிகள் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.