யாரும் இனி லேட்டா வரக்கூடாது… ''பயோமெட்ரிக் வருகை பதிவேடு'' அரசு ஊழியர்க ளுக்கு அடுத்த ஆப்பு வைத்த ஆதித்யநாத்
உத்தரப்பிரதேசத்தில், அரசு ஊழியர்கள் சரியான நேரத்துக்கு அலுவலகம் வருவதை உறுதி செய்யும் வகையில், மண்டல அளவில் அனைத்து அலுவலகங்களிலும் ‘பயோமெட்ரிக்’ வருகை பதிவேட்டை கட்டாயமாக்கி முதல்வர் ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.
மாநில, கிராம மேம்பாட்டுத்துறை அதிகாரிகளுடன் நேற்று முன் தினம் இரவு ஆலோசனை நடத்தியபின் இந்த உத்தரவை முதல்வர் ஆதித்தயநாத் பிறப்பித்துள்ளார்.
உத்தரப்பிரதேசத்தில் பா.ஜனதா ஆட்சியைப் பிடித்தபின், அங்கு பதவி ஏற்ற முதல்வர் ஆதித்யநாத்அதிரடியாக செயல்பட்டு வருகிறார். விவசாய கடன் தள்ளுபடி, பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் தனிப்படை, சட்டவிரோத இறைச்சி கடைகளை மூடுதல் உள்ளிட்ட பல நடவடிக்கைகளை எடுத்து வரவேற்பை பெற்று வருகிறார்.
அதேசமயம், அரசு அலுவலர்கள் வேலை நேரத்தில் பான் மசாலா, குட்கா மெல்லக்கூடாது, ஜீன்ஸ்பேண்ட் அணியக்கூடாது உள்ளிட்ட ஒழுங்க நெறிமுறைகளையும் முதல்வர் ஆதித்யநாத்விதித்துள்ளார்.
இந்நிலையில், நேற்று முன் தினம் கிராம மேம்பாட்டுத்துறை அதிகாரிகளுடன் முதல்வர்ஆதித்யநாத் ஆலோசனை நடத்தினார். அதன்பின், முதல்வர் ஆதித்யநாத் அதிரடியாக உத்தரவுகளை பிறப்பித்தார்.
அதில், “ மாநிலத்தில் மண்டல அளவில் உள்ள அரசு அலுவலகங்களில் அலுவலர்கள் சரியான நேரத்துக்கு வருகை தர ‘பயோமெட்ரிக்’ வருகை பதிவேடு வைக்க வேண்டும். மேலும், ஒவ்வொரு கிராம பஞ்சாயத்திலும், கிராம நிர்வாக அலுவலர், கிராமத்தின் மேம்பாட்டு பணிகள் என்ன நடக்கின்றன, அதன் விவரங்களை அரசுக்கு அனுப்ப வேண்டும்.
ஏழைகளுக்கு வீடு கட்டிக் கொடுக்கும் மத்திய அரசின் திட்டமான பிரதான் மந்திரி ஆவாஸ்யோஜனா திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும். அது தொடர்பான பயணாளிகளை பதிவு செய்தல், புகைப்படம் எடுத்தல், அதை பதிவேற்றம் செய்தல் 5.73 லட்சம் தகுதியான நபர்களை அடையாளம் காணுதல் போன்ற பணிகளை மிக விரைவாக அதிகாரிகள் செய்துமுடிக்க வேண்டும்.
மேலும், மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் வெளிப்படைத்தன்மையை கொண்டு வர ,அனைத்து பயணாளிகளையும், ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டும். பண்டேல் கண்ட் பகுதியில் மட்டுமே குடிநீர் வசதி ஏற்படுத்தி தராமல், மாநிலத்தின் அனைத்துப்பகுதிகளிலும் இதுபோன்ற வசதிகளை உண்டாக்கித் தர வேண்டும்
இந்தப்பகுதியில் குடிநீர் தட்டுப்பாட்டை தீர்க்க, செயல்படாமல் இருக்கும் குடிநீர் குழாய்களை சீரமைத்து ‘கை பம்புகள்’ அமைக்கப்படும். 31 மாவட்டங்களில் குழாய்கள் மூலம் குடிநீர் வழங்கும் 160 திட்டங்களை முடித்து, குடிநீர் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும். இதற்கு அந்தந்த தொகுதியில் உள்ள எம்.எல்.ஏ.க்கள், எம்.எல்.சி.க்கள் முயற்சி எடுக்க வேண்டும்’’ என உத்தரவிட்டுள்ளார்.