Instagram Facebook on the watch
பேஸ்புக், இன்ஸ்டாகிராமில் விலை உயர்ந்த கார்கள் முன் நின்று புகைப்படம் எடுத்தல், காஸ்ட்லி வாட்ச், வெளிநாடு சுற்றுலா சென்ற புகைப்படங்களை நீங்கள் பதிவிட்டு இருந்தால் நிச்சயம் வருமானவரித்துறை நோட்டீசுக்கு ஆளாவீர்கள்.
கருப்பு பணத்தை பிடிக்கும் முயற்சியாக அடுத்த மாதத்தில் இருந்து “புரோஜெக்ட் இன்சைட்” எனும் திட்டத்தை வருமான வரித்துறை செயல்படுத்த இருக்கிறது.
அதன்படி, உங்கள் வருவாய் கணக்குக்கும், நீங்கள் செய்யும் செலவுக்கும் முரண்பாடு ஏற்பட்டால், அது குறித்து சமூக வலைதளங்களில் இருந்து விவரங்களை அதாவது, நீங்கள் வெளியிட்டு இருக்கும் புகைப்படங்களை ஒப்பிட்டுப் பார்த்து ஆய்வு செய்து வருமானவரித்துறை நடவடிக்கை எடுக்கும்.
கருப்பு பணத்தை மறைக்க, வரி செலுத்தாமல் தப்பிக்க, சிலர் வெளிநாடு சுற்றுலா, விலை உயர்ந்த பொருட்களை வாங்குகிறார்கள். அவர்களை பிடிக்க அவர்களின் சமூக வலைதளங்களில் பதிவிடும் புகைப்படங்களையும், வீடியோக்களையும் ஆதாரமாக வைத்து பிடிக்க வருமான வரித்துறை இந்த திட்டத்தை செயல்படுத்துகிறது.
பான்கார்டுடன், ஆதார் கார்டை இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளதால், தனிநபர் ஒருவரின் சொத்துக்கள், வருவாய் அனைத்தும் 360 டிகிரி கோணத்தில் ஆய்வு செய்யப்பட உள்ளது.
இதற்காக வருமான வரித்துறை கடந்த ஆண்டு லார்சன் அன்ட் டூப்ரோ இன்போடெக் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து “புரோஜெக்ட் இன்சைட்” எனும் திட்டத்தை செயல்படுத்த உள்ளது.
இது குறித்து வருமான வரித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், “ லார்சன் அன்ட் டூப்ரோ நிறுவனத்துடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தையடுத்து “புராஜெக்ட் இன்சைட்” திட்டத்தின் சோதனை ஓட்டம் நடந்து வருகிறது. அடுத்த மாதம் முறைப்படி இந்த திட்டத்தை செயல்படுத்துவோம்.
இந்த திட்டத்தில் வருமானவரி செலுத்தும் ஒரு தனிநபரின் விவரங்கள், புள்ளிவிவரத் தொகுப்பு உள்ளிட்ட அனைத்தும் அடங்கி இருக்கும். இந்த திட்டத்தில், தனிநபர் ஒருவர் செய்யும் அதிகபட்ச பணப்பரிமாற்றம் , செய்யும் செலவுகள் உள்ளிட்டவை கண்காணிக்கப்படும். இதன் மூலம் கருப்பு பணம் புழக்கம் தடுக்கப்படும். மேலும், அடுத்து வரும் ஆண்டுகளில் வருமானவரி வளையத்துக்குள் அதிகமானோர் உள்ளே வரை வாய்ப்பு உண்டு.
இந்த திட்டத்தில் வருமானவரி செலுத்துபவரின் ஐ.டி. ரிட்டன், டி.டி.எஸ். அறிக்கை, பணப்பரிமாற்ற விவரங்கள் அனைத்தும் பகிரப்படும்” எனத் தெரிவித்தார்.
