பிரதமர் மோடியின் பஞ்சாப் பயணத்தின் போது ஏற்பட்ட பாதுகாப்பு குறைபாடு தொடர்பாக விசாரணை மேற்கொள்ள உச்சநீதிமன்றம் அமைத்த 5 பேர் கொண்ட குழு விசாரணையை தொடங்கியுள்ளது. 

பிரதமர் மோடியின் பஞ்சாப் பயணத்தின் போது ஏற்பட்ட பாதுகாப்பு குறைபாடு தொடர்பாக விசாரணை மேற்கொள்ள உச்சநீதிமன்றம் அமைத்த 5 பேர் கொண்ட குழு விசாரணையை தொடங்கியுள்ளது. பஞ்சாப் மாநிலம், பெரோஸ்பூரில் 42,750 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்பதற்காக கடந்த மாதம் 5 ஆம் தேதி பிரதமர் மோடி அம்மாநிலத்திற்கு பயணம் மேற்கொண்டார். இந்நிலையில் விமான நிலையத்திலிருந்து ஹெலிகாப்டரில் வான் வழியாக அவர் பயணம் மேற்கொள்ள இருந்த நிலையில் திடீரென சாலை மார்கமாக பயணிக்க திட்டமிடப்பட்டது. பெரோஸ்பூர் மாவட்டத்திற்கு மோடி சாலை வழியாக காரில் சென்றபோது, விவசாயிகள் மறியல் போராட்டத்தால், அவரது பயணம் தடைப்பட்டது. 20 நிமிடங்கள் வரை மேம்பாலத்திலேயே அவர் காத்திருக்க நேரிட்டது.

பிரதமரின் வருகை, திட்டம் குறித்து பஞ்சாப் அரசிடம் ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டும் முறையான பாதுகாப்பு ஏற்பாடுகளை பஞ்சாப் காவல்துறை மேற்கொள்ளவில்லை என குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதனால், பயணத்தை ரத்து செய்துவிட்டு பிரதமர் மோடி டெல்லி திரும்பினார். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில், நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு, பிரதமர் மோடியின் பாதுகாப்பு குறைபாடு விவகாரம் குறித்த அனைத்து விசாரணைகளையும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கவும், இந்த விவகாரம் தொடர்பாக ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணைக் குழு அமைத்து விசாரணை நடத்தப்படும் என்று தெரிவித்திருந்தார்.

மேலும் பஞ்சாபில் பிரதமர் மோடிக்‍கு ஏற்பட்ட பாதுகாப்பு குறைபாடு தொடர்பாக, உச்சநீதிமன்ற கண்காணிப்பில் உரிய விசாரணை நடத்தக்‍கோரி மனிந்தர் சிங் என்ற வழக்‍கறிஞர் மனுத்தாக்‍கல் செய்தார். இந்த வழக்‍கை விசாரித்த நீதிமன்றம், உச்சநீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி இந்து மல்கோத்ரா தலைமையில் 5 பேர் கொண்ட விசாரணைக் குழுவை கடந்த மாதம் அமைத்தது. குழுவின் உறுப்பினர்களாக பஞ்சாப் காவல்துறை தலைவர், தேசிய புலனாய்வு அமைப்பின் இயக்குநர், பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்ற பதிவாளர் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். இந்நிலையில், விசாரணையை தொடங்கியுள்ள இந்த குழு, நேற்று ஃபெரோஸ்பூருக்கு சென்றது. பிரதமரின் வாகனம் தடுத்து நிறுத்தப்பட்ட பகுதி, அவர் காத்திருந்த மேம்பாலம் உள்ளிட்ட இடங்களில் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக விசாரணை மேற்கொண்டது.