எஸ்.சி, எஸ்.டி தொழில் முனைவோருக்கு அநீதி: சு.வெங்கடேசன் எம்.பி. காட்டம்!
எஸ்.சி, எஸ்.டி., சிறு, குறு, தொழில் முனைவோர் இடம் இருந்து கொள்முதல் செய்யப்படும் அளவு குறித்து நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய அரசு பதிலளித்துள்ளது
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில், “மத்திய பொதுத் துறை நிறுவனங்களின் கொள்முதலில் எஸ்.சி, எஸ்.டி., சிறு, குறு, தொழில் முனைவோர் இடம் இருந்து எவ்வளவு கொள்முதல் செய்யப்படுகிறது?” என்ற கேள்வியை மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் எழுப்பியிருந்தார்.
அதற்கு மத்திய சிறு, குறு, நடுத்தர தொழில் அமைச்சர் பானு பிரதாப் சர்மா பதிலளித்துள்ளார். அதில், “2018 - 19 இல் 166 மத்திய பொதுத் துறை நிறுவனங்கள் செய்த மொத்த கொள்முதல் ரூ.153485 கோடிகள். இதில் எஸ்.சி, எஸ்.டி., சிறு, குறு, தொழில் முனைவோர் இடம் இருந்து செய்யப்பட்ட கொள்முதல் ரூ.825 கோடிகள். இது மொத்த கொள்முதலில் 0.54 சதவீதம்.
2019- 20 இல் 152 மத்திய பொதுத் துறை நிறுவனங்கள் செய்த மொத்த கொள்முதல் ரூ.131461 கோடிகள். இதில் எஸ்.சி, எஸ்.டி., சிறு, குறு, தொழில் முனைவோர் இடம் இருந்து செய்யப்பட்ட கொள்முதல் ரூ.691 கோடிகள். இது மொத்த கொள்முதலில் 0.53 சதவீதம்.
2020 - 21 இல் 161 மத்திய பொதுத் துறை நிறுவனங்கள் செய்த மொத்த கொள்முதல் ரூ 139420 கோடிகள். இதில் எஸ்.சி, எஸ்.டி., சிறு, குறு, தொழில் முனைவோர் இடம் இருந்து செய்யப்பட்ட கொள்முதல் ரூ.769 கோடிகள். இது மொத்த கொள்முதலில் 0.55 சதவீதம்.
2021 - 22 இல் 159 மத்திய பொதுத் துறை நிறுவனங்கள் செய்த மொத்த கொள்முதல் ரூ 164542 கோடிகள். இதில் எஸ்.சி, எஸ்.டி., சிறு, குறு, தொழில் முனைவோர் இடம் இருந்து செய்யப்பட்ட கொள்முதல் ரூ.1291 கோடிகள். மொத்த கொள்முதலில் இது 0.78 சதவீதம்.
கர்நாடகாவை கலக்கிய சசிகாந்த் செந்தில்: அடுத்த டார்கெட் ராஜஸ்தான்!
2022 - 23 இல் 150 மத்திய பொதுத் துறை நிறுவனங்கள் செய்த மொத்த கொள்முதல் ரூ 175099 கோடிகள். இதில் எஸ்.சி, எஸ்.டி., சிறு, குறு, தொழில் முனைவோர் இடம் இருந்து செய்யப்பட்ட கொள்முதல் ரூ 1468 கோடிகள். இது மொத்த கொள்முதலில் 0.84 சதவீதம்.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள மதுரை எம்.பி., சு.வெங்கடேசன், அரசு செய்யும் கொள்முதலில் எஸ்.சி, எஸ்.டி., தொழில் முனைவோருக்கு அநீதி இழைக்கப்படுவதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், மத்திய அமைச்சர் தந்துள்ள பதில் அதிர்ச்சியை அளிக்கிறது. எஸ்.சி, எஸ்.டி., சிறு, குறு, தொழில் முனைவோரிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்டவை எல்லாம் அரை சதவீதம், முக்கால் சதவீதமாக உள்ளது.
ஒன்றிய அரசின் அமைச்சகங்கள், துறைகள், பொதுத் துறை நிறுவனங்கள் தாங்கள் செய்யும் சரக்கு/ சேவை கொள்முதலில் 4 சதவீதம் எஸ்.சி, எஸ். டி சிறு, குறு, தொழில் முனைவு நிறுவனங்கள் இடம் இருந்து கொள்முதல் செய்ய வேண்டுமென்று, சிறு குறு நடுத்தர தொழில் மேம்பாட்டு சட்டம் 2006 இன் அடிப்படையில் உருவாக்கப்பட்ட 2012 சிறு குறு தொழில்களுக்கான பொது கொள்முதல் கொள்கை ஆணை வரையறுத்துள்ளது. ஆனால் 4 சதவீதம் எங்கே? இந்த அரை முக்கால் சதவீதம் எங்கே?” என கேள்வி எழுப்பியுள்ளார்.
2012 ஆணையை மீறுபவர்களுக்கு தண்டனையாக ஒரு மதிப்பெண் குறைக்கப்படுகிறது என்று அமைச்சரின் பதில் கூறுவதாக சுட்டிக்காட்டும் சு.வெங்கடேசன் எம்.பி., “இதுவரை எத்தனை நிறுவனங்கள் தண்டிக்கப்பட்டுள்ளன? மதிப்பெண் குறைவதால் என்ன விளைவு?” என கேள்வி எழுப்பியதுடன், அப்படி தண்டிக்கப்பட்டு இருப்பதாக வைத்துக் கொண்டாலும் சதவீதம் 4 க்கு பக்கத்திலேயே இல்லையே? எனவும் தெரிவித்துள்ளார்.