- Home
- இந்தியா
- LPG Shortage: சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்படும்.! 2025-ல் ஜோதிடர் சொன்னது இப்போது நடக்கிறதா? வைரலாகும் அதிர்ச்சி ட்வீட்!
LPG Shortage: சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்படும்.! 2025-ல் ஜோதிடர் சொன்னது இப்போது நடக்கிறதா? வைரலாகும் அதிர்ச்சி ட்வீட்!
Gas Cylinder Shortage in India : இந்தியாவில் மார்ச் 2026 ஆம் ஆண்டிற்கு பிறகு எரிபொருள் தட்டுப்பாடு வரும் என்று ஜோதிடர் ஒருவர் கடந்த ஆண்டே கணித்துள்ளார். அவரின் இந்த பதிவு தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

சிலிண்டர் தட்டுப்பாடு
மத்திய கிழக்கு நாடுகளில் நடைபெற்று வரும் போர் பதற்றம் காரணமாக உலகம் முழுவதும் எரிசக்தி விநியோகம் பாதிக்கப்பட்டு இருக்கிறது. இந்தியாவில் உள்ள பல நகரங்களில் ஹோட்டல்கள், ரெஸ்டாரன்ட் மாதிரியான இடங்களுக்கு கமர்சியல் சிலிண்டர் கிடைப்பதில் மிகவும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்தியாவில் 2026 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் என்று பிரபல ஜோதிடர் கனித்திருப்பது தற்போது வைரலாகி வருகிறது.
பிரசாந்த் கினி கணிப்பு
பிரசாந்த் கினி என்ற ஜோதிடர் நாட்டில் நடக்கும் பல நிகழ்வுகளை முன்கூட்டியே கணித்து அதை சமூக வலைதளங்களில் பதிவிட்டு பிரபலமானவர். இவர் 2025 செப்டம்பர் மாதம் எக்ஸ் தளத்தில் ஒரு பதிவை பதிவிட்டு இருந்தார். அதில் இந்தியாவில் 2026 ஆம் ஆண்டு மார்ச்சுக்கு பின்னர் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு விநியோகத்தில் பாதிப்பு ஏற்படலாம் என்று எச்சரித்திருந்தார். “இந்தியா 2026-க்கு பின்னர் எரிபொருள் மற்றும் எரிவாயு தட்டுப்பாடை சந்திக்கும், சப்ளை செயின் பாதிக்கப்படும்” என்று அந்த பதிவில் குறிப்பிட்டிருந்தார்.
India will face fuel and natural Gas shortage after March 2026...
Supply chain disrupt...!!??— Prashanth Kini (@AstroPrashanth9) September 27, 2025
5 மாதங்களுக்கு முன்பே கணிப்பு
தற்போது இந்தியாவில் எல்பிஜி தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கும் நிலையில் அந்த ட்விட்டை ரீ-ட்வீட் செய்திருக்கும் அவர், இந்த கணிப்பை தாம் கிட்டத்தட்ட ஐந்து மாதத்திற்கு முன்பே சொல்லியிருந்ததாக கூறியிருக்கிறார். இந்த பதிவு சோசியல் மீடியா பயனர்கள் மத்தியில் பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அந்த பதிவுக்கு கீழ் பலரும் பலவிதமான கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். இன்னும் சிலரோ, “இந்த பிரச்சனை எப்போது சரியாகும் என்று கணிக்க முடியுமா” என கேட்டுள்ளனர்.
எஸ்மா சட்டம்
எல்பிஜி தட்டுப்பாடு மிகப்பெரிய பிரச்சனையாக இந்தியாவில் உருவெடுத்துள்ளது. பல நகரங்களில் வணிக சிலிண்டர்கள் கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக ஹோட்டல் தொழிலை நம்பி இருப்பவர்கள் இதனால் மிகப்பெரும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கின்றனர். மத்திய அரசு இந்தியாவில் அத்தியாவசிய பொருட்கள் சட்டமான எஸ்மாவை அமல் படுத்தியிருக்கிறது. இதன்படி வீடுகள், மருத்துவமனைகள், பிற முக்கிய சேவைகளுக்கு முன்னுரிமை கொடுக்கப்படுகிறது.
புக்கிங் கால அவகாசம் அதிகரிப்பு
இதன் காரணமாக வணிக சிலிண்டர்கள் விநியோகம் குறைக்கப்பட்டு இருக்கிறது. வீட்டு உபயோக சிலிண்டர்கள் புக் செய்வதற்கான கால அவகாசமும் 21 நாட்களில் இருந்து 25 நாட்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் சிலிண்டர் விநியோகத்தை சீராக்க எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்க சுத்திகரிப்பு ஆலைகளுக்கும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.

