‘ஜன கன மன’ தேசிய பாடல் தானா? - மத்திய அரசுக்கு தகவல் ஆணையம் நோட்டீஸ்
தேசிய கீதம், தேசிய பாடல் தொடர்பான வரலாற்று ரீதியான உண்மைகள் என்ன? என்பது குறித்து கண்டறிய புதிய முயற்சிகளை எடுக்க வேண்டும் என்று பிரதமர் அலுவலகத்திடம் மத்திய தகவல் ஆணையம் கேட்டுள்ளது.
தகவல் அறியும் உரிமைச்சட்டம் மூலம், தேசிய கீதம், பாடல் குறித்த வரலாற்று உண்மைகள் கூறாததையடுத்து, இந்த கேள்வியை பிரதமர் அலுவலகத்திடம், தேசிய தகவல் ஆணையம் கேட்டுள்ளது.
தேசிய கீதமான ‘ஜன கன மன’ பாடல், ‘வந்தே மாதரம்’ எனும் தேசிய பாடல் ஆகியவை அரசு சார்பில் அங்கீகரிக்கப்பட்டதா? என்பது குறித்து சான்று அளிக்கக் கோரி, பிரதமர் அலுவலகத்துக்கு தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் ஹரிந்தர் திங்ரா என்பவர் மனு செய்து இருந்தார்.
அதற்கு பதில் அளித்த பிரதமர் அலுவலகம், ‘ஜன கன மன’ பாடல், ‘வந்தே மாதரம்’ பாடலுக்கு அரசு அங்கீகாரம் கொடுத்தது குறித்த விவரங்கள் இல்லை எனத் தெரிவித்து இருந்தது.
இது குறித்து மத்திய தகவல் ஆணையர் ஸ்ரீதர் ஆச்சார்யலு கூறுகையில், “ மத்திய பொது தகவல் அதிகாரிகள் தேசிய கண்ணோட்டம் சார்ந்தவிசயங்களில், மிக எளிதாக பதில்களை கூறி நிராகரித்து விடுவது மிகுந்த வியப்பை அளிக்கிறது. அவர்களின் மவுனம், உண்மையில், ‘ஜன கன மன’ பாடலுக்கும், ‘வந்தே மாதரம்’ பாடலுக்கும் மத்திய அரசின் அங்கீகாரம் இருக்கிறதா? என்பது குறித்து சந்தேகத்தை எழுப்புகிறது.
‘ஜன கன மன’ தேசிய பாடல் தானா? என்பது குறித்து மக்கள் மத்தியில் எழுந்துள்ள சந்தேகங்கள், தவறான புரிந்துணர்வுகள் ஆகியவற்றை போக்க அதிகாரப்பூர்வமாக பதில் அளிக்க வேண்டும். அதற்கு போதுமான ஆதாரங்களை அளித்து மத்திய அரசு அதிகாரிகள் தெளிவு படுத்த வேண்டும்.
தேசிய கீதத்தை உச்ச நீதிமன்றம் மதித்து நடக்க வேண்டும் என்று கூறியுள்ளது. அவ்வாறு மதித்து நடக்க வேண்டுமானால், மக்களுக்கு தேசிய கீதத்தின் வரலாற்று முக்கியத்துவத்தையும், காரணங்களையும் எடுத்துக்கூறி விழிப்புணர்வு உண்டாக்க மத்திய அரசு முயற்சிக்க வேண்டும். தேசிய கீதம் பாடல் ஒலிக்கும் போது, எழுந்து நிற்காத, மதிக்காத, மக்களை தண்டிக்கும் முன், தேசிய கீதம் குறித்த முக்கியத்துவத்தை மக்களுக்கு உணர்த்த வேண்டும்.
சமூக வலைதளங்களில் தேசிய கீதம், தேசிய பாடல் குறித்து தவறான பிரசாரங்கள் எழுப்பப்படுகின்றன. ஆதலால், இந்த நாட்டுக்கு தேசிய கீதம், தேசிய பாடல் குறித்து முழுமையான, அதிகாரப்பூர்வமான தகவல் தேவையாகும்.
ஆதலால், தேசிய கீதம், தேசிய பாடல் குறித்த வரலாற்று ஆதாரங்களை தேட புதிய முயற்சிகளை எடுத்து அதை வெளிக்கொண்டு வர பிரதமர் அலுவலகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் '' எனத் தெரிவித்தார்.