அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட இண்டிகோ விமானத்தின் எஞ்சினில் தீப்பிடித்தது. இந்த சம்பவம் தொடர்பான முழு விவரங்களை பார்க்கலாம்.

IndiGo Flight Catches Fire At Ahmedabad Airport: அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் கிளம்பிய சிறிது நேரத்திலேயே கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த மருத்துவக் கல்லூரி கட்டடம் மீது விழுந்து நொறுங்கியது. கடந்த மாதம் நடந்த இந்த கோர விபத்தில் குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபாணி உள்பட 260 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களின் உடல்கள் அடையாளம் தெரியாத அளவுக்கு முற்றிலுமாக எரிந்து கரிக்கட்டையான நிலையில் இந்த விபத்து இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அஹமதாபாத் விமான நிலையத்தில் மீண்டும் அதிர்ச்சி

இந்நிலையில், அஹமதாபாத் விமான நிலையத்தில் 60 பயணிகளுடன் இருந்த ஒரு விமானத்தில் தீப்பிடித்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது இன்று காலை 11 மணிக்கு அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து டையூ நோக்கி இண்டிகோ விமான நிறுவனத்தின் ATR76 ரக விமானம் புறப்பட தயாராக இருந்தது. அந்த விமானம் ஓடுபாதையில் இருந்து புறப்படத் தொடங்கியபோது விமானத்தின் எஞ்சினில் தீப்பிடித்தது கண்டு விமானி அதிர்ச்சி அடைந்தார்.

இண்டிகோ விமானத்தில் தீப்பிடித்தது

இதனைத் தொடர்ந்து விமான கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அறைக்கு 'மேடே' 'மேடே' என அவசரகால அழைப்பை விடுத்த விமானி அந்த விமானத்தை மீண்டும் நிறுத்துமிடத்திற்கு திருப்பினார். இதன்பிறகு எஞ்சினில் எரிந்த தீ உடனடியாக அணைக்கப்பட்டு அதில் இருந்த பயணிகள் அனைவரும் அவசரம், அவசரமாக வெளியேற்றப்பட்டனர். பயணிகள் உடனடியாக வெளியேற்றப்பட்டத்தால் நல்ல வேளையாக யாருக்கும் எந்தவித காயமும் ஏற்படவில்லை.

இண்டிகோ விமான நிறுவனம் விளக்கம்

இது தொடர்பாக இண்டிகோ விமான நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், ''அகமதாபாத்திலிருந்து டையூவிற்கு புறப்படவிருந்த இண்டிகோ விமானத்தில் 6E 7966 டேக்-ஆஃபிற்கு சற்று முன்பு ஒரு தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. அந்த விமானம் மீண்டும் புறப்பட்ட இடத்துக்கு கொண்டு வரப்பட்டது. விமானம் மீண்டும் இயக்கப்படுவதற்கு முன்பு தேவையான சோதனைகள் மற்றும் பராமரிப்பு மேற்கொள்ளப்படும். இதனால் வாடிக்கையாளர்களுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு வருந்துகிறோம், அவர்களுக்கு தங்களுக்கு விருப்பமான அடுத்த விமானத்தில் பயணம் செய்ய அல்லது டிக்கெட் முழு பணத்தைத் திரும்பப் பெறுவதற்கு ஏற்பாடு செய்யப்படும்'' என்று கூறப்பட்டுள்ளது.

விமானியின் சாமர்த்தியத்தால் பெரும் விபத்து தவிர்ப்பு

இண்டிகோ விமானத்தின் எஞ்சினில் தீப்பிடித்ததற்கான காரணங்கள் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கெனவே இதே அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் விழுந்து நொறுங்கி 260 உயிர்களை காவு வாங்கியது. இப்போது அங்கு மீண்டும் விபத்து நடந்துள்ளது பயணிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. நல்லவேளையாக இண்டிகோ விமானி தீப்பிடித்ததை உடனடியாக கண்டறிந்து சாமர்த்தியாக செயல்பட்டு விமானத்தை நிறுத்தி விட்டார். இல்லையென்றால் பெரும் விபத்து ஏற்பட்டு இருக்கும்.