இந்தியாவின் முதல் பெண் வக்கீல்... மறக்காமல் கூகுள் தந்த கவுரவம்...
இன்று இந்தியாவின் முதல் பெண் வழக்கறிஞரின் பிறந்தநாள் என்பது பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லைதான். ஆனால், இணையத்தின் வழியே வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கும் இளம் தலைமுறைக்கு கூகுள் அதனை நினைவூட்டி அப் பெண்மணிக்கு பெருமை சேர்த்துள்ளது.
மிகச் சிறந்த தேடு பொறியான கூகுள் நிறுவனத்தின் கூகுள் பக்கம் மூலம் இன்று யார் எதை இணைத்தில் தேடினாலும், தேடல் சுட்டிக்கு மேலே தெரியும் டூடுல் பாக்ஸில் வித்தியாசமாக ஒரு பெண்மணியின் படத்தைப் பார்த்துவிட்டுத்தான் தேடலைத் தொடருவார்கள். இந்த டூடுலை வெளியிட்டு கூகுள் நிறுவனம் அப்பெண்மணிக்கு கவுரவம் சேர்த்துள்ளது!
இந்தியாவின் முதல் பெண் வழக்கறிஞர் கார்னெலியா சோரப்ஜியின் 151வது பிறந்த தினத்தை கூகுள் நிறுவனம் டூடுலாக வெளியிட்டு பெருமைப் படுத்தியுள்ளது.
கார்னெலியா சோரப்ஜி, மகராஷ்டிரா மாநிலத்திலுள்ள நாஷிக் மாவட்டத்தில் 1866ஆம் ஆண்டு நவம்பர் 15ஆம் தேதி பிறந்தவர். 1954 ஜூலை 6 ஆம் தேதி லண்டனில் அவர் காலமானார்.
கார்னேலியா சோரப்ஜியின் பெற்றோரும் வழக்கறிஞர்கள் தான். எனவே, பெற்றோர்களின் ஊக்குவிப்பாலும் தனது முயற்சியாலும், பாம்பே பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற முதல் பெண் என்ற பெருமையை கார்னெலியா பெற்றிருக்கிறார். இந்தியாவின் இளையதலைமுறை, இன்று இவரைப் பற்றி அறிந்து கொள்ள கூகுள் உதவியிருக்கிறது.