69 நாட்களில் 10 லட்சம் இலவச காண்டம் விநியோகம்! நேரில்வர வெட்கப்பட்டு ஆன்லைன் மூலம் ஆர்டர்...
நேரில் வர வெட்கப்பட்டு, ஆன்-லைன் மூலமாக 69 நாட்களில் மட்டும் 10 லட்சம் இலவச ஆணுறைகள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
நேரில் வாங்க தயக்கம்
எய்ட்ஸ் நோயை கட்டுப்படுத்தும் விதமாக, அரசும், பல்வேறு தொண்டு நிறுவனங்களும் ஆணுறைகளை இலவசமாக விநியோகித்து வருகின்றன. இதில் நேரில் சென்று வாங்க ஆண்களில் பலர் தயக்கம் காட்டுவதால், எய்ட்ஸ் ஹெல்த்கேர் என்ற தனியார் தொண்டு நிறுவனம் ஆன்லைன் மூலமாக இலவச ஆணுறை பெறுவதற்கு இணைய தளம் ஒன்றை கடந்த ஏப்ரல் 28-ந்தேதி தொடங்கியது.
கர்நாடக நிறுவனம்
இந்த நிறுவனம் ஆணுறைகளுக்கு பெயர்பெற்ற கர்நாடகாவை மையமாக கொண்டு செயல்படும், ஹிந்துஸ்தான் லேடக்ஸ் லிமிட்டெட் நிறுவனத்துடன் இணைந்து செயல்படுகிறது. இந்த நிலையில் ஆரம்பிக்கப்பட்ட 69 நாட்களில் மட்டும் 10 லட்சம் ஆணுறைகள் விநியோகிப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து, எய்ட்ஸ் ஹெல்த்கேர் பவுன்டேஷனின் இயக்குனர் டாக்டர். ராம் பிரசாத் கூறியதாவது-
அதிக ஆர்டர்கள்
நாங்கள் 10 லட்சம் ஆணுறைகளை இருப்பில் வைத்திருந்தோம். இந்த எண்ணிக்கை டிசம்பர் வரைக்கும் போதுமானது என நினைத்தோம். ஆனால், ஜூலை மாதத்தின் முதல் வாரத்திலேயே அதாவது இந்த சேவை தொடங்கப்பட்டு 69 நாட்களிலேயே 10 லட்சம் ஆணுறைகள் விற்றத் தீர்ந்து விட்டன. எனவே மேலும் 20 லட்சம் ஆணுறைகளை நாங்கள் ஆர்டர் செய்துள்ளோம். இம்மாத இறுதிக்குள் அவை கிடைத்து விடும். அடுத்த ஆண்டு ஜனவரியில் 50 லட்சம் ஆணுறைகளை ஆர்டர் செய்ய திட்டமிட்டுள்ளோம்.
இதில், 5.14லட்சம் ஆணுறைகளை தனியார் தொண்டு நிறுவனங்கள் , சமூக நல அமைப்புகள் ஆர்டர் செய்தன. 4.41 லட்சம் ஆணுறைகளை தனிநபர்கள் ஆர்டர் செய்தனர். இதில் கர்நாடக, டெல்லி மாநிலங்களில் இருந்துதான் அதிகமாக ஆர்டர்கள் வந்தன. என்றார்.
ஆன்லைன் விருப்பம் ஏன்?
ஆன்லைன் மூலமாக ஆணுறை விற்பனை அதிகரித்துள்ளது குறித்து, வல்லுனர்கள் கூறும்போது, பெரும்பாலான இந்தியர்கள் பாலியல் தொடர்பான பொருட்களை கடைகளுக்கு சென்று வாங்க விரும்புவதில்லை, வெட்கப்படுகின்றனர். பாலியல் பொருட்களை கடைக்காரரிடம் சொல்லி வாங்குவதற்கு கூச்சப்படுகின்றனர். ஆன்லைனில் ஒருவர் ஆர்டர் செய்தால் அந்த பெட்டிக்குள் என்ன பொருள் இருக்கும் என்பது, அதனை கொண்டு வருவோருக்கு தெரியாது. இதனால் ஆன்லைனில் பாலியல் பொருட்களின் விற்பனை அதிகரித்துள்ளது என்றார்.
ஆண்டுக்கு 220 கோடி
தேசிய அளவில் ஆணுறை குறித்து 54 சதவீத பெண்களும், 77 சதவீத ஆண்கள் மட்டுமே விழிப்புணர்வு கொண்டுள்ளதாக ஆய்வறிக்கை ஒன்று தெரிவிக்கிறது. தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலில், ‘பாலியல் தொழிலாளிகள் மத்தியில் ஆணுறை உபயோகம் அதிகரித்துள்ளது. இருப்பினும் எய்ட்ஸ் நோயை கட்டுப்படுத்து இன்னும் நடவடிக்கைகள் தேவை. இந்தியாவில் மட்டும் ஆண்டுக்கு 200 முதல் 220 கோடி ஆணுறைகள் விற்பனையாகின்றன’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.