‘மற்ற நாடுகளை விட இந்தியர்கள் விரைவாக பணக்காரர் ஆகிறார்கள்’... சர்வதேச ஆய்வில் தகவல்
மற்ற நாடுகளை விட இந்தியர்கள் விரைவாக பணக்காரர் ஆகிவிடுகின்றனர் என்று சர்வதேச அளவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச வளம்
சுவிட்சர்லாந்தை மையமாக கொண்டு செயல்படும் ‘கிரெடிட் சூச்சி ரிசர்ச்’ என்ற அமைப்பு சர்வதேச அளவில் பல்வேறு ஆய்வறிக்கைகளை வெளியிட்டு வருகிறது. சமீபத்தில் அந்த அமைப்பு ‘2017-ல் சர்வதேச செல்வ வளம்’ என்கிற தலைப்பில் ஆய்வு மேற்கொண்டு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது-
ஓராண்டு ஆய்வு
மற்ற அனைத்து நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியர்கள் விரைவாக பணக்காரர்கள் ஆகின்றனர். இது கடந்த 2016 ஜூலை முதல் 2017 ஜூன் வரை மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. இதேபோன்று ஆசியாவில் 3-வது மிகப்பெரிய பொருளாதார நாடாக இந்தியா உள்ளது. ஆய்வு நடத்தப்பட்ட ஓராண்டில் இந்தியாவுடைய செல்வத்தில் 30 லட்சம் கோடி ரூபாய் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளது. இதன்படி இந்தியாவின் மொத்த வளத்தில் 9.9 சதவீதம் அதிகரித்திருக்கிறது. முதலிடத்தில் 10.1 சதவீதம் அதிகரித்துள் அமெரிக்கா இடம்பெற்றுள்ளது.
பங்குச் சந்தைகள் ஏற்றம்
இதேபோன்று இந்திய பங்குச் சந்தைகளும் ஏற்றம் கண்டிருக்கின்றன. ஆய்வு மேற்கொள்ளப்பட்ட 12 மாதங்களில் 56 சதவீதம் அளவுக்கு மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் அதிகரித்திருக்கிறது. வீடுகளின் விலை சுமார் 10 சதவீதமும், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 4 சதவீதமும் அதிகரித்திருக்கின்றன. நாட்டின் மொத்த வளத்தில் இளைஞர்களின் பங்களிப்பு 7.9 சதவீதமாக உள்ளது. சுமார் 92 சதவீத இளைஞர்களிடம் ரூ. 6.5 லட்சத்துக்கும் குறைவாக சொத்துகள் உள்ளது. 0.5 சதவீதம் பேரிடம் ரூ. 65 லட்சத்துக்கும் அதிகமாக சொத்து உள்ளது.
உலக வங்கி அறிக்கை
பொருளாதாரத்தை பொருத்தவரையில் சீனாவுக்கும், இந்தியாவுக்கும் மிகப்பெரும் வித்தியாசம் ஒன்று உள்ளது. அது என்னவெனில், சீனாவில் பெரும்பாலான இளைஞர்கள் பணக்காரர்களாக உள்ளனர். செல்லாத ரூபாய் நோட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட பின்னர், இந்தியர்களிடம் இருந்த பெரும்பாலான அசையா சொத்துக்கள் ரூபாய்களாக மாற்றப்பட்டு விட்டது என்று உலக வங்கி தெரிவித்திருந்தது.
பணக்கார இளைஞர்கள்
உலக பணக்காரர்களில் 3.4 லட்சம் பேர் இந்திய இளைஞர்கள். இது மொத்த பணக்காரர்களில் 0.7 சதவீதம். இந்தியாவில் 2.45 லட்சம் கோடீஸ்வரர்களும், 42 மிகப்பெரும் கோடீஸ்வரர்களும் உள்ளனர். இவர்களில் கோடீஸ்வரர்களின் சொத்து மதிப்பு 2020-க்குள் 52 சதவீதம் உயரும். இந்தியாவோடு ஒப்பிடுகையில் சீனாவில் 20 லட்சம் இளைஞர்கள் கோடீஸ்வரர்களாக உள்ளனர்.
இவ்வாறு அந்த ஆய்வறிக்கையி்ல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியர்களின் கடன்
கடன்களை பொருத்தவரையில் சராசரியாக ஒவ்வொரு இந்தியருக்கும் தலா ரூ. 25 ஆயிரம் இருப்பதாக தெரியவந்துள்ளது. இது அவர்களின் மொத்த சொத்துக்களின் சராசரியோடு ஒப்பிடும்போது வெறும் 9 சதவீதம் மட்டுமே. இதேபோன்று வீடு கட்டியது, வாங்கியது தொடர்பான கடன்கள் கடந்த ஓராண்டில் 20 சதவீதம் அதிகரித்திருக்கிறது. இந்தியாவில் ஏழை மக்களுக்கு கடன் சுமை என்பது மிகப்பெரும் பிரச்சினையாக உள்ளது. அப்படி இருந்தும், இந்தியாவை விட மற்ற நாடுகளில் மக்கள் அதிகளவு வீட்டுக் கடன்களை பெற்றுள்ளனர்.