படிப்பை தொடர முடியாமல் தவிக்கும் இந்திய மாணவர்கள்... இந்தியா தவிர 29 நாடுகளில் படிப்பை தொடர அனுமதி!!
உக்ரைனில் இருந்து நாடு திரும்பிய இந்திய மாணவர்கள் 29 நாடுகளின் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து தங்களது படிப்பை தொடரலாம் என்று தெரிவித்துள்ள மத்திய அரசு அந்த நாடுகளின் பெயர் பட்டியலையும் வெளியிட்டுள்ளது.
உக்ரைனில் இருந்து நாடு திரும்பிய இந்திய மாணவர்கள் 29 நாடுகளின் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து தங்களது படிப்பை தொடரலாம் என்று தெரிவித்துள்ள மத்திய அரசு அந்த நாடுகளின் பெயர் பட்டியலையும் வெளியிட்டுள்ளது. உக்ரைனில் மருத்துவம் படிக்க இந்திய மாணவர்கள் சுமார் 20,000 பேர் சென்றிருந்தனர். இந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம், உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததை அடுத்து, இந்திய மாணவர்கள் அனைவரும் நாடு திரும்பினர். போர் தொடர்ந்து நீடித்து வருவதால் மருத்துவ மாணவர்களின் கல்வி கேள்விக்குறியானது. இதை அடுத்து இந்திய மருத்துவ கல்லூரியில் தங்களது படிப்பை தொடர அனுமதி அளிக்க உத்தரவிடுமாறு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு நடைபெற்று வருகிறது.
இதையும் படிங்க: தனிநபரின் வங்கி கணக்கிற்கு வந்த ரூ.11ஆயிரம் கோடி… அதிர்ச்சி அடைந்த பயணர்… அடுத்து நிகழ்ந்தது என்ன?
தற்போது உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில், ரஷ்ய போரால் மருத்துவப் படிப்பை பாதியில் விட்டு உக்ரைனில் இருந்து இந்தியா திரும்பிய மாணவர்களுக்கு, இந்தியாவில் இருக்கும் மருத்துவக் கல்லூரிகளில் சேர்க்கை அளிக்க சட்டத்தில் இடமில்லை. மருத்துவப் படிப்பை தொடர முடியாமல் பாதிக்கப்பட்டுள்ள, வெளிநாட்டில் பயின்ற இந்திய மாணவர்களுக்கு உதவிடும் வகையில் அவர்கள் வெளிநாடுகளில் தங்கள் படிப்பை தொடர தடையேதும் இல்லை என்று தெரிவித்துள்ளது. மத்திய அரசின் இந்த பதிலால், ஆயிரக்கணக்கான எம்பிபிஎஸ் மாணவர்களின் கல்விக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து மத்திய அரசு வட்டாரங்கள் கூறுகையில், உக்ரைனில் இருந்து திரும்பிய மாணவர்களுக்காக அகாடமிக் மொபிலிட்டி திட்டத்தின் கீழ், இந்தியா தவிர 29 நாடுகளில் மருத்துவ படிப்பை தொடர அனுமதிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: புதிய கட்சியை பாஜகவில் இணைக்கிறாரா அமரிந்தர் சிங்? பஞ்சாப் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்திய தகவல்!!
அவர்கள் இந்தியாவில் தங்களது படிப்பை தொடர முடியாது. மாணவர்கள் வெளிநாடுகளில் படிப்பதற்காக 29 நாடுகளில் போலந்து, ஆஸ்திரியா, செக் குடியரசு, பிரான்ஸ், ஜார்ஜியா, கஜகஸ்தான், லிதுவேனியா, மால்டோவா, ஸ்லோவாக்கியா, ஸ்பெயின், உஸ்பெகிஸ்தான், அமெரிக்கா, இத்தாலி, பெல்ஜியம், எகிப்து, பெலாரஸ், லாட்வியா, கிர்கிஸ்தான், கிரீஸ், ருமேனியா, சுவீடன், இஸ்ரேல், ஈரான், அஜர்பைஜான், பல்கேரியா, ஜெர்மனி, துருக்கி, குரோஷியா, ஹங்கேரி ஆகிய நாடுகள் உள்ளன. இந்த நாடுகளில் படிப்பை முடித்தாலும், அவர்களுக்கு அந்தந்த உக்ரைன் பல்கலைக்கழகத்தால் பட்டப்படிப்பு சான்று வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது. இதனிடையே 600க்கும் மேற்பட்ட மருத்துவக் கல்லூரிகளைக் கொண்ட இந்தியாவில், வெளிநாட்டில் படிப்பை தொடர முடியாமல் இந்திய மருத்துவ மாணவர்கள் தவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.