உலகின் மிக உயரமான போர்முனையில் முதல் பெண் ராணுவ அதிகாரி!
உலகிலேயே மிக உயரமான போர்முனையான சியாச்சின் பனிச்சிகரத்தில் முதல் முறையாக ஒரு பெண் அதிகாரியை இந்திய ராணுவம் பணியில் அமர்த்தியுள்ளது.
15,600 அடி உயரத்தில் உள்ள சியாச்சின் பனிச்சிகரப் பகுதி உலகின் உயரமான போர்முனையாக உள்ளது. காரகோரம் மலைத்தொடரில் அமைந்துள்ள இப்பகுதி பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிக்கும் சீனாவின் ஜின்ஜியாங் மாகாணத்துக்குச் செல்லும் சாலைக்கும் அருகில் அமைந்துள்ளது.
ராணுவ ரீதியாக மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இப்பகுதியில் திங்கட்கிழமை இந்திய ராணுவம் சார்பில் முதல் முறையாக கேப்டன் சிவா சௌகான் என்ற பெண் அதிகாரி பணியமர்த்தப்பட்டிருக்கிறார்.
கடுங்குளிரை எதிர்கொண்டு பணியாற்றவேண்டிய சவாலான பணியில் சேர்வதற்கு முன், சியாச்சின் பேட்டில் ஸ்கூல் என்ற பயற்சிப் பள்ளியில் பயிற்சி பெற்றிருக்கிறார். ஜனவரி முதல் மூன்று மாதங்கள் சியாச்சின் பனிச்சிகரத்தில் பணியாற்ற இருக்கிறார்.
சந்திரயான் முதல் ககன்யான் வரை - இஸ்ரோவின் புதிய திட்டங்கள்
ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த கேப்டன் சிவா சௌகான் 11 வயதிலேயே தன் தந்தையை இழந்திருக்கிறார். சிவில் எஞ்சினியரிங் பட்டம் பெற்ற இவர், முதலில் 2021ஆம் ஆண்டு மே மாதம் ராணுவத்தின் பொறியாளர் பிரிவில் இணைக்கப்பட்டார். இவர் சென்னையில் உள்ள ராணுவப் பயிற்சி அகாடமியில் பயிற்சி பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பணியில் சேர்ந்த ஓராண்டிலேயே தனது உறுதியான செயல்திறனை நிரூபித்த சிவா சௌகான், கார்கில் போர் வெற்றியை நினைவுகூரும் விதமாக இந்திய ராணுவம் மேற்கொண்ட 508 கி.மீ. சைக்கிள் பயணத்தை முன்நின்று வெற்றிகரமாக வழிநடத்தினார்.
சியாச்சின் சிகரத்தில் இந்திய ராணுவத்தில் பணிபுரியும் முதல் பெண் அதிகாரி என்ற பெருமையைப் பெற்றுள்ள இவருக்கு, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வாழ்த்து கூறியுள்ளார்.
அமைச்சரின் கருத்து அரசின் கருத்து அல்ல: உச்ச நீதிமன்றம்