அமைச்சரின் கருத்து அரசின் கருத்து அல்ல: உச்ச நீதிமன்றம்
அமைச்சர்கள் கூறும் கருத்துகளை அரசின் கருத்தாகக் கொள்ளவேண்டியது இல்லை என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
பொது வாழ்க்கையில் இயங்குபவர்களின் கருத்துச் சுதந்திர உரிமைக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு இன்று தீர்ப்பு வழங்கியது.
ஐந்து நீதிபதிகளில் அப்துல் நசீர், பி. ஆர். கவாய், ஏ. எஸ். போபன்னா மற்றும் ரவிசுப்ரமணியன் ஆகியோர் கூட்டாக ஒரு தீர்ப்பு வழங்கினர். நீதிபதி பி. வி. நாகரத்னா தனியே மாறுபட்ட தீர்ப்பு ஒன்றை வழங்கினார்.
நான்கு நீதிபதிகள் அனைவரும் கருத்துச் சுதந்திரத்திற்கு எந்த நிபந்தனைகளும் விதிக்கவேண்டிய அவசியமில்லை என்ற முடிவை எடுத்துள்ளனர். கருத்துச் சுதந்திரம் குறித்த அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 19 (2) ல் பூரணமானது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் அமைச்சர்கள் கூறும் கருத்துகளை அவர் அங்கம் வகிக்கும் அரசின் கருத்தாகவும் கொள்ளவேண்டியது இல்லை என்றும் அமைச்சர்களின் கூற்றுக்கு அவர்களே பொறுப்பு என்றும் நான்கு நீதிபதிகளின் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
தனி தீர்ப்பு வழங்கிய நீதிபதி நாகரத்னா, "இந்தியா போன்ற பன்முகம் கொண்ட நாட்டில் வெறுப்பைப் பரப்பும் வகையான பேச்சுகள் சமத்துவம், நல்லிணக்கம் போன்ற சமூகத்தின் அடிப்படை மதிப்பீடுகளைத் தகர்த்துவிடும்" என்று தெரிவித்துள்ளார்.
அமைச்சரின் கருத்துகள் அரசின் கருத்துகள் அல்ல என்று அரசு தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்படவில்லை என்றால், அமைச்சரின் கருத்து அரசின் கருத்தும்தான் என்று கொள்ளலாம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
நான்கு நீதிபதிகளின் தீர்ப்பை வாசித்த நீதிபதி ரவிசுப்ரமணியன், 7 நிமிடங்களில் தீர்ப்பை வாசித்து முடித்துக்கொண்டார். தனி தீர்ப்பு வாசித்த நீதிபதி நாகரத்னா அரைமணிநேரம் தனது தீர்ப்புரையை நிகழ்த்தினார்.