ஜனவரி 20 முதல் உலக நாடுகளுக்கு இந்திய கொரோனா தடுப்பூசி விநியோகம்..! பிரதமர் மோடி பெருமிதம்
உலக நாடுகளுக்கு இந்திய கொரோனா தடுப்பூசிகளான கோவேக்சின் மற்றும் கோவிஷீல்டு ஆகிய தடுப்பூசிகள் நாளை முதல் இந்தியாவிலிருந்து அனுப்பிவைக்கப்படுவதை உறுதி செய்த பிரதமர் மோடி, உலக நாடுகளுக்கு மருத்துவ மற்றும் மருந்து தேவைகளை பூர்த்தி செய்வதில், இந்தியா தொடர்ந்து சிறந்த பங்களிப்பு செய்து வருவது குறித்து பெருமிதமும் தெரிவித்தார்.
உலகையே அச்சுறுத்திய கொரோனா வைரஸ் பரவலை தடுக்க, தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில் உலக நாடுகள் ஈடுபட்ட நிலையில், அதில் வெற்றி கண்ட நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டு, இந்தியாவிலேயே முழுக்க முழுக்க உற்பத்தி செய்யப்பட்ட கோவேக்சின் மற்றும் கோவிஷீல்டு ஆகிய 2 தடுப்பூசிகளும் கடந்த 16ம் தேதியிலிருந்து இந்தியாவில் அமலுக்கு வந்தது.
முதல் நாளான ஜனவரி 16ம் தேதி மட்டும் 1,91,181 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. இந்த 3 நாட்களில் மொத்தமாக 3 லட்சத்து 80 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
கொரோனா தடுப்பூசி முயற்சியில் வெற்றி கண்ட இந்தியாவிற்கும் பிரதமர் மோடிக்கும் இலங்கை, பூடான், மாலத்தீவு உள்ளிட்ட அண்டை நாட்டு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
இந்தியாவில் சுமார் 4 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ள நிலையில், வெளிநாடுகளுக்கு நாளை முதல் இந்தியாவிலிருந்து தடுப்பூசிகள் அனுப்பிவைக்கப்படவிருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
கொரோனா பெருந்தொற்று காலத்தில் ஹைட்ராக்ஸி க்ளோரோகுயின், பாராசிட்டமல் மாத்திரைகள், வெண்டிலேட்டர்கள், முகக்கவசங்கள், பரிசோதனை கிட்கள் ஆகியவற்றை பல நாடுகளுக்கு அனுப்பிவைத்து உதவியது இந்தியா.
அந்தவரிசையில், தற்போது இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்ட இந்திய தயாரிப்பு கொரோனா தடுப்பூசிகளான கோவேக்சின் மற்றும் கோவிஷீல்டு ஆகிய தடுப்பூசிகளை பூடான், மியான்மர், வங்கதேசம், நேபாளம், மாலத்தீவு ஆகிய நாடுகளுக்கு அவற்றின் கோரிக்கையை ஏற்று நாளை அனுப்பிவைக்கிறது இந்தியா. மருத்துவ மற்றும் மருந்து தேவை சார்ந்த விஷயங்களில் உலக நாடுகளுக்கு தொடர்ச்சியாக இந்தியா தனது உதவியை செய்துவரும் நிலையில், கொரோனா தடுப்பூசிகள் நாளை முதல் இந்த நாடுகளுக்கு அனுப்பிவைக்கப்படவிருப்பது, பிரதமர் மோடியின் டுவிட்டர் பக்கத்தில் உறுதி செய்யப்பட்டுள்ளது.