பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்திய வீடியோவை இந்தியா வெளியிட்டுள்ளது.

India - Pakistan War : பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா, இன்று அதிகாலை பாகிஸ்தான் மீது வான்வழித் தாக்குதல் நடத்தியது. இன்று மூன்று இந்தியப் படைகளின் கூட்டு நடவடிக்கையான 'ஆபரேஷன் சிந்தூர்' நடைபெற்றது. இந்த நடவடிக்கையில் பாகிஸ்தானில் உள்ள நான்கு பயங்கரவாத முகாம்களும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள ஐந்து பயங்கரவாத முகாம்களும் குறிவைக்கப்பட்டன. இந்தத் தாக்குதலில், பஹவல்பூர், முரித்கே, குல்பூர், கோட்லி, முசாஃபராபாத் போன்ற இடங்களில் உள்ள ஜெய்ஷ்-இ-முகமது, லஷ்கர்-இ-தொய்பா போன்ற பயங்கரவாத அமைப்புகளின் முகாம்கள் குறிவைக்கப்பட்டன. இந்தியாவின் வான்வழித் தாக்குதலில் பல பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்திய வீடியோ

இந்நிலையில் இந்தியா பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்திய வீடியோ வெளியாகி உள்ளது. டெல்லியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது பாதுகாப்புத்துறை சார்பில் இந்த வீடியோ வெளியிடப்பட்டது. இந்த வீடியோவில் பாகிஸ்தானிலும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலும் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா துள்ளியமாக தாக்குதல் நடத்தி உள்ளது பதிவாகி இருக்கிறது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

Scroll to load tweet…

இந்தியாவில் விமானங்கள் ரத்து

இதற்கிடையில், பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களில் இந்திய ராணுவம் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, இந்திய விமான நிறுவனங்கள் பல விமானங்களை ரத்து செய்தன. மேலும், வட இந்தியாவில் உள்ள சில விமான நிலையங்கள் மூடப்பட்டன. இண்டிகோவின் 160 உள்நாட்டு விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

டெல்லி விமான நிலையத்தில் பல்வேறு விமான நிறுவனங்களின் குறைந்தது 20 விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போதைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, ஜம்மு, ஸ்ரீநகர், லே, ஜோத்பூர், அமிர்தசரஸ், புஜ், ஜாம்நகர், சண்டிகர், ராஜ்கோட் ஆகிய விமான நிலையங்களுக்குச் செல்லும் அனைத்து விமானங்களும் நண்பகல் 12 மணி வரை ரத்து செய்யப்பட்டதாக ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.