ஐ.நா. அறிக்கையின்படி, இந்தியாவின் மக்கள் தொகை 146 கோடியைத் தாண்டியுள்ளது. அடுத்த 40 ஆண்டுகளில் 170 கோடியாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இளைஞர் தொகை அதிகமாக இருந்தாலும், குழந்தை பிறப்பு விகிதம் குறைந்து வருகிறது.

ஐக்கிய நாடுகள் சபை (ஐ.நா.) வெளியிட்டுள்ள உலக மக்கள் தொகை அறிக்கையின்படி, இந்தியாவின் மக்கள் தொகை தற்போது 146 கோடியே 39 லட்சமாக உயர்ந்துள்ளது. இதன்மூலம், உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக இந்தியா தொடர்ந்து நீடிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

எதிர்கால மக்கள் தொகை கணிப்பு:

இந்த அறிக்கையின்படி, அடுத்த 40 ஆண்டுகளில் இந்தியாவின் மக்கள் தொகை சுமார் 170 கோடியாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பிறகு மக்கள் தொகை படிப்படியாக குறையத் தொடங்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

குழந்தை பிறப்பு விகித சரிவும், இளைஞர் நலனும்:

இந்தியாவில் குழந்தை பிறப்பு விகிதம் தொடர்ந்து சரிந்து வந்தாலும், இளைஞர்களின் மக்கள் தொகை குறிப்பிடத்தக்க அளவில் உள்ளது. நாட்டின் மொத்த மக்கள் தொகையில், 14 வயதுக்கு உட்பட்டவர்கள் 24 சதவீதமாகவும், 10 முதல் 19 வயதுக்கு உட்பட்டவர்கள் 17 சதவீதமாகவும், 10 முதல் 24 வயதுக்கு உட்பட்டவர்கள் 26 சதவீதமாகவும் உள்ளனர்.

உழைக்கும் வயது மக்கள் தொகை:

இந்தியாவின் 68 சதவீத மக்கள், 15 முதல் 64 வயதுக்கு உட்பட்ட உழைக்கும் வயதைச் சேர்ந்தவர்கள் ஆவர். 65 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்களின் எண்ணிக்கை தற்போது 7 சதவீதமாக உள்ளது. ஆயுட்காலம் அதிகரித்து வருவதால், இந்த எண்ணிக்கை மேலும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சராசரி ஆயுட்காலம்:

இந்த ஆண்டு நிலவரப்படி, ஆண்களுக்கான சராசரி ஆயுட்காலம் 71 ஆண்டுகளாகவும், பெண்களுக்கான சராசரி ஆயுட்காலம் 74 ஆண்டுகளாகவும் உள்ளது. இது கடந்த காலங்களை விட கணிசமான முன்னேற்றத்தைக் காட்டுகிறது.

கடந்த கால மாற்றங்கள்:

கடந்த 1960 ஆம் ஆண்டில், இந்தியாவின் மக்கள் தொகை 43 கோடியே 60 லட்சமாக இருந்தது. அப்போது ஒரு சராசரி பெண் 6 குழந்தைகள் பெற்றெடுத்தார். நான்கில் ஒரு பெண் மட்டுமே கருத்தடை முறைகளைப் பயன்படுத்தினர். மேலும், இரண்டில் ஒருவர் மட்டுமே தொடக்கப்பள்ளி கல்வி பெற்றிருந்தனர்.

பெண்கள் முன்னேற்றம்:

காலப்போக்கில், கல்வி அறிவு அதிகரித்தது. பெண்கள் தங்கள் உடல்நலம் குறித்து சுயமாக முடிவெடுக்கும் சுதந்திரத்தைப் பெற்றனர். இதன் விளைவாக, தற்போது ஒரு சராசரி பெண் 2 குழந்தைகள் மட்டுமே பெற்றுக்கொள்கிறார். பிரசவ கால மரணங்களும் குறைந்துள்ளன. தங்களின் தாய்மார்கள் மற்றும் பாட்டிகளுக்கு இருந்த உரிமைகளை விட இன்றைய பெண்கள் அதிக உரிமைகளையும், விருப்பத்தேர்வுகளையும் பெற்றுள்ளனர் என்று ஐ.நா. அறிக்கை தெரிவித்துள்ளது.