நாட்டில் 3,565 பெண்களுக்கு ஒரு பெண் போலீஸ் மட்டுமே பாதுகாப்பு 9 மாநிலங்களில் பெண்களுக்கு இடமில்லை... ஆய்வில் அதிர்ச்சி தகவல்!
நாட்டில் 3 ஆயிரத்து 565 பெண்களின் பாதுகாப்புக்கு ஒரு பெண் போலீசார் மட்டுமே இருக்கிறார். 9 மாநிலங்களில் போலீஸ் துறையில் பெண்களே இல்லை, 13 மாநிலங்களில் ஒரு சதவீதத்துக்கும் குறைவாகவே இருக்கிறார்கள் என்று போலீஸ் ஆய்வு மற்றும் மேம்பாட்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆய்வறிக்கை
2011ம் ஆண்டு மக்கள் தொகை அடிப்படையில் இந்த கணக்கீட்டையும், ஆய்வையும் போலீஸ் ஆய்வு மற்றும் ேமம்பாட்டுஅமைப்பு நடத்தியுள்ளது. இந்த ஆய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது-
6.6 சதவீதம்
நாட்டில் மொத்தம் 58.64 கோடி பெண்கள் உள்ளனர். இதில் நாடுமுழுவதும் உள்ள 24 லட்சம் போலீசில், பெண் போலீசார் மட்டும் 1.6 லட்சம் பேர் இருக்கின்றனர். ஒட்டுமொத்த போலீசாரின் எண்ணிக்கையோடு ஒப்பிடும் போது இது வெறும் 6.6 சதவீதம் ஆகும்.
மொத்தம் உள்ள 24 லட்சம் போலீசில், 19.89 லட்சம் போலீசார் மக்கள் பாதுகாப்பு பணியிலும், 4.75 லட்சம் போலீசார் ஆயுதப் படைப் பிரிவிலும் உள்ளனர். இதில் பெண் போலீசார் 24 ஆயிரத்து 335 பேர் மட்டுமே இருக்கின்றனர்.
6 மாநிலங்கள்
மாநிலங்கள் அளவில் பார்க்கும் போது, 6 மாநிலங்களில் மட்டுமே போலீஸ் துறையில் பெண்களுக்கு 5 சதவீதத்துக்கும் அதிகமான இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. 13 மாநிலங்களில் ஒரு சதவீதத்துக்கும் குறைவாகவும், 7 மாநிலங்களில் ஒரு சதவீதத்துக்கு அதிகமாகவும், 2 சதவீதத்துக்குள்ளும் போலீசில் பெண்களுக்கு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. 9 மாநிலங்களில் போலீஸ் துறையில் பெண்களுக்கு இடம் ஒதுக்கப்படவே இல்லை .
வளர்ந்த மாநிலங்களான கர்நாடக மாநிலத்தில் போலீஸ் துறையில் பெண்கள் 3.49 சதவீதமும், கேரளாவில் 2.82 சதவீதமும், குஜராத்தில் 3.92 சதவீதமும், ஆந்திராவில் 1.47 சதவீதமும் மட்டுமே இருக்கின்றனர்.
குற்றங்கள் அதிகரிப்பு
இந்த பற்றாக்குறை காரணமாக ஒவ்வொரு ஆண்டும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்தவாறு இருக்கிறது. கடந்த 2016ம் ஆண்டு, பெண்களுக்கு எதிராக பாலியல் பலாத்காரம், பலாத்கார முயற்சி, தாக்குதல் உள்ளிட்ட 2.38 லட்சம் வழக்குகள் பதிவாகியுள்ளன. இது கடந்த 2015ம் ஆண்டைக் காட்டிலும் மிக அதிகமாகும்.
உயர்த்துவது அவசியம்
ெபண்களுக்கு எதிரான குற்றங்களைக் குறைக்க போலீஸ் துறையில் அவர்களின் பங்களிப்பை அதிகப்படுத்துவது முக்கியமானதாகும். போலீஸ் துறையில் பெண்களின் பங்கு குறைந்துவருவது, சமூகத்தில் அவர்களுக்கு எதிரான குற்றங்களை அதிகரிக்கவும் ஒரு காரணியாகும். ஆதலால், இனிவரும் காலங்களில் பெண்களுக்கு போலீஸ் துறையில் அதிகமான பங்களிப்பு அளிக்க வேண்டும்
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம், மஹாராஷ்டிராவில் அதிகம்
நாட்டில் உள்ள மாநிலங்களில் மஹாராஷ்டிரா மாநில போலீஸ் துறையில் 19 சதவீதம் பெண் போலீசாரும், தமிழக போலீஸ் துறையில் 12 சதவீதம் பெண்களும் இடம் பெற்றுள்ளனர். போலீஸ் துறையில் பெண்களின் எண்ணிக்கை என்பது ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகிறது. கடந்த 2012ம் ஆண்டு நாட்டில் 97 ஆயிரத்து 518 பெண் போலீசார் இருந்த நிலையில், 2017ம் ஆண்டு இந்த எண்ணிக்கை 1.5 லட்சமாக உயர்ந்துள்ளது.