உலகை அச்சுறுத்திவந்த கொரோனா வைரஸ் இந்தியாவிலும் பரவ தொடங்கியுள்ளது. இதுவரை கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 62ஆக உயர்ந்துள்ளது. நேற்று மட்டும் 18 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

சீனாவில் பல ஆயிரம் பேரை காவு வாங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகளுக்கும் பரவ தொடங்கியுள்ளது. உலக முழுவதுமாக கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்தை தாண்டி விட்டது. இந்நிலையில் இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பரவ தொடங்கியுள்ளது. நம் நாட்டில் பெரிய அளவில் கொரோனா வைரஸ் பரவவில்லை என்றாலும் நாளுக்கு நாள் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க இத்தாலி உள்பட பல்வேறு நாட்டினருக்கு வழங்கப்பட்ட விசாக்களை மத்திய அரசு ரத்து செய்தது. இந்நிலையில், பிரான்ஸ், ஜெர்மனி, ஸ்பெயின் ஆகிய நாட்டவர்களுக்கு ரெகுலர் விசாக்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் அந்நாடுகளுக்கு செல்ல வேண்டாம் எனவும் மத்திய அரசு குடிமக்களுக்கு கடுமையான அறிவுரைகளை வழங்கியுள்ளது. மிசோரம், மணிப்பூர் ஆகிய மாநிலங்கள் தங்களது பகுதியில் உள்ள மியான்மர் மற்றும் வங்கதேச எல்லைகளுக்கு சீல் வைத்துள்ளது.

இந்நிலையில் நாடு முழுவதுமாக நேற்று மட்டும் 18 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக கேரளாவில் 8 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அடுத்து மகாராஷ்டிரா (5 பேர்), கர்நாடகா (4 பேர்) மற்றும் ஜம்மு அண்டு காஷ்மீர் (1) ஆகிய மாநிலங்களிலும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து நம் நாட்டில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 62ஆக உயர்ந்துள்ளது. ஆனால் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகமோ பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 50என மதிப்பிட்டுள்ளது..