இந்த விஷயத்தில் அமெரிக்காவையே அடித்து தூக்கிய இந்தியா... புதிய மைல்கல் சாதனை...!
அமெரிக்காவை விட அதிக எண்ணிக்கையிலான கொரோனா தடுப்பூசிகளை செலுத்தி இந்தியா மைல்கல் சாதனை படைத்துள்ளது.
கொரோனா தொற்றிலிருந்து மக்களை பாதுகாக்க தடுப்பூசி செலுத்துவது ஒன்றே சரியான வழி என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளன. எனவே நாடு முழுவதும் தடுப்பூசி செலுத்தும் திட்டம் குறித்து மத்திய, மாநில அரசுகள் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றன. தடுப்பூசி செலுத்துவதில் பல சாதனைகளை இந்தியா செய்து வரும் நிலையில், இதில் உலகின் வல்லரசு நாடு என மார்தட்டிக் கொள்ளும் அமெரிக்காவையே இந்தியா மண்ணைக் கவ்வ வைத்துள்ளது.
நாடு முழுவதும் தடுப்பூசி செலுத்தும் திட்டம் இந்தியாவில் கடந்த ஜனவரி 16-ஆம் தேதி தொடங்கிய நிலையில், அமெரிக்காவில் அதற்கு முன்பாக கடந்த 2020-ஆம் ஆண்டு டிசம்பர் 14-ம் நாளே தொடங்கியது. ஆனால் இன்று காலை 8 மணி நிலவரப்படி இந்தியாவில் 32 கோடியே 36 லட்சத்து 63 ஆயிரத்து 297 டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. ஆனால் அமெரிக்காவில் இதுவரை 32 கோடியே 33 லட்சத்து 27 ஆயிரத்து 328 டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில் 17 லட்சத்து 21 ஆயிரத்து 268 டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 46,148 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ள போதும், தொடர்ந்து 21வது நாளாக அன்றாட புதிய பாதிப்புகள் ஒரு லட்சத்திற்கும் கீழ் பதிவாகியுள்ளது மக்களுக்கு புதிய நம்பிக்கையை அளித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 5,72,994 ஆகக் குறைந்துள்ளது. தொடர்ந்து 46-வது நாளாக, புதிய பாதிப்புகளை விட தினசரி குணமடைவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 58,578 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் புதிதாகத் தொற்றுக்கு ஆளானவர்களை விடக் கூடுதலாக 12,430 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மொத்த நபர்களில் 2 கோடியே 93 லட்சத்து 09 ஆயிரத்து 607 பேர் குணமடைந்துள்ளனர். இதன் மூலம் கொரோனா தொற்றிலிருந்து மீண்டவர்களின் சதவீதம் 96.80 சதவீதமாக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.