தலைநகர் டெல்லியில் வருமான வரித்துறையினர் நடத்திய அதிரடிச் சோதனையில் செல்லாத நோட்டுகள் ரூ. 250 கோடிக்கு தங்கத்தை வாங்கி கருப்பு பணப் பதுக்கல்காரர்கள் பதுக்கியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ரூபாய் நோட்டு அறிவிப்பு

நாட்டில் கருப்புபணம், கள்ள நோட்டுகளை ஒழிக்கும் நோக்கில் ரூ.500, ரூ.1000 செல்லாது என கடந்த மாதம் 8-ந்தேதி பிரதமர் மோடி அறிவித்தார். அதைத் தொடர்ந்து மக்கள் பணம் டெபாசிட் செய்யவும், பணம் எடுக்கவும் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

தங்கம் குவிப்பு

இந்த சூழ்நிலையைப் பயன்படுத்தி, கருப்பு பணம் பதுக்கல்காரர்கள் சிலர் தங்களிடம் இருக்கும் செல்லாத ரூபாய் நோட்டுகளைப் பயன்படுத்தி தங்கத்தை வாங்கி குவித்து வருகின்றனர்.

ரூ.250 கோடி

இது குறித்து தகவல் அறிந்து நாடுமுழுவதும் வருமான வரித் துறையினர் தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். இதில் டெல்லியில் மட்டும் ரூ.250 கோடி செல்லாத ரூபாய் நோட்டுகள் மூலம் தங்கம் வாங்கிக்குவிக்கப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து வருமான வரித்துறையினர் தரப்பில் கூறப்படுவதாவது-

செல்லாத ரூபாய்

நவம்பர் 8-ந்தேதி பிரதமர் மோடி ரூபாய் நோட்டு குறித்த அறிவிப்பு வெளியானதும் டெல்லியில் மட்டும் ரூ. 400 கோடிக்கு தங்கம் விற்பனையானது என ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் நேற்று முன்தின் கரோல்பார்க், சாந்தினிசவுக், உள்ளிட்ட பல பகுதிகளில் உள்ள நகைக்கடைகள், தங்கநகை விற்பனையாளர்கள் அலுவலகங்களில் அதிரடியாக சோதனை நடத்தினோம். இதில் ரூ. 250 செல்லாத நோட்டுகளைப் பெற்றுக்கொண்டு, தங்கம் விற்பனை ெசய்ததுகண்டுபிடிக்கப்பட்டது.

சோதனை

ஏறக்குறைய 12 நகைக்கடைகள், நகைக்கடை அதிபர்களின் 8 அடுக்கு மாடி குடியருப்புகளில் சோதனை நடத்தப்பட்டது. இதில் 4 முக்கிய நகைக்கடை அதிபர்கள் ரூ. 250 செல்லாத நோட்டுகளைக் பெற்றுக்கொண்டு, அதை போலியான வங்கிக்கணக்குகள் மூலம் மாற்றியுள்ளது தெரியவந்தது.

போலி நிறுவனம்

இதில் குச்சா மகாஜனி பகுதியில் உள்ள நகைக்கடைகளில் ரூபாய் நோட்டு அறிவிப்புக்கு பின், விற்கப்பட்ட நகைகளின் மதிப்பு குறித்து சோதனை நடத்தப்பட்டது. அதில் ஒரு நகைக்கடை வர்த்தகர் ரூ.100 கோடிக்கு தங்கத்தை பரிமாற்றம் செய்துள்ளார்.அவர் போலி நிறுவனங்கள் பெயரில் வங்கிக்கணக்கு தொடங்கி, அந்த நிறுவனங்களில் பணத்தைடெபாசிட் செய்து, அதை தனது வங்கிக்கு மாற்றியது தெரியவந்தது. இது குறித்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம் எனத் தெரிவித்தனர்.