பினாமி பரிவர்த்தனை செய்த லாலு மகள்...- ரூ.10 ஆயிரம் அபராதம் நீதிமன்றம் அதிரடி உத்தரவு...
பினாமி நில பேர ஊழல் வழக்கில் நேரில் ஆஜராகாத காரணத்தினால், லாலுபிரசாத் யாதவின் மகள் மிசா பாரதிக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மீண்டும் வரும் 12-ம் தேதி தவறாமல் ஆஜராக வேண்டும் என்று அவருக்கு வருமானவரித்துறை உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கில் பாரதியுடன் தொடர்புடைய ஆடிட்டர் ராஜேஷ்குமார் அகர்வால் என்பவர் அமலாக்கத் துறை அதிகாரிகளால் கடந்த மாதம் 22-ம் தேதி கைது செய்யப்பட்டார். லாலுவின் மகள் சட்ட விரோதமான முறையில் பணப் பரிமாற்றத்தில் ஈடுபடுவதற்கு அகர்வால் உதவியதாக கூறப்படுகிறது.
வழக்கு விசாரணைக்காகவே பாரதிக்கு சம்மன் அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாகவும், அவர் அளிக்கும் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்படும் என்றும் வருமான வரித் துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
டெல்லயின் பிஜ்வாஸன் பகுதியில் உள்ள ஒரு பண்ணை வீட்டை வாங்கும் விவகாரத்தில் தனியார் நிறுவனங்களுடன் கை கோர்த்து பாரதியும் அவரது கணவரும் பினாமி பேரத்தில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படுகிறது. இது தவிர பிற சொத்து பேரங்கள் தொடர்பாகவும் வருமான வரித் துறை தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறது.
இதுகுறித்து வருமான வரித் துறை அதிகாரிகள் கூறும்போது, ‘‘பாரதி மற்றும் அவரது கணவருக்கு எதிராக புதிதாக கொண்டு வரப்பட்ட பினாமி பரிவர்த்தனைகள் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இச்சட்டப்படி குற்றம் நிரூபிக்கப்பட்டவர்களுக்கு ஏழு ஆண்டுகள் வரை சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படலாம்’’ என்றனர்.
அதேசமயம் பாஜகவின் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை காரணமாக தனது மகள் மீது வழக்கு தொடரப்பட்டிருப்பதாகவும், இதன் மூலம் தன்னை அச்சுறுத்த முடியாது என்றும் லாலு தெரிவித்துள்ளார்.
ஆனால் பாஜகவோ லாலு பிரசாத் மகள் பாரதி மற்றும் பிஹார் மாநில அமைச்சர்களாக உள்ள அவரது மகன்களான தேஜஸ்வி, தேஜ் பிரதாப் இருவரும் ரூ.1,000 கோடி அளவுக்கு நில பேர ஊழலில் ஈடுபட்டிருப்பதாக குற்றம்சாட்டியுள்ளது.