ரூ.10 லட்சத்துக்கு அதிகமாக சம்பாதிக்கிறீங்களா? - ‘புது ஆப்பு’ ரெடியா இருக்கு...!!
ஆண்டுக்கு ரூ. 10 லட்சத்துக்கு அதிகமாக வருவாய் ஈட்டுபவர்களுக்கு மானிய விலையில் வழங்கப்படும் ஆண்டுக்கு 12 சமையல் கியாஸ்சிலிண்டர்களை நிறுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இது குறித்து மத்திய பெட்ரோலிய துறை அமைச்சகத்திடம் வருமான வரித்துறை ரூ10 லட்சத்துக்கு மேல் வருமானம் ஈட்டுவோரின் விவரங்களை அளிக்க இருக்கிறது.
மானியத் திருட்டு
உயர் வருமானம் ஈட்டுவோர் தொடர்ந்து அரசின் மானியங்களை அனுபவித்து வருகின்றனர். இதனால், ஏழைமக்களுக்கு மானியம் முறையாக சென்று சேர்வதில்லை. இதைத் தடுக்கவே, இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
அனைத்தும்..
ரூ.10 லட்சத்துக்கு அதிகமாக வருவாய் ஈட்டுவோரின் பெயர்களை மட்டும் பெட்ரோலியத் துறை அமைச்சகத்திடம் தெரிவிக்காமல், அந்த நபர்களின் பான் எண், பிறந்த தேதி, பாலினம், வீட்டு நிரந்த முகவரி, வசிப்பிட முகவரி, வருமானவரி செலுத்தும்போது தாக்கல் செய்த நகல், மின் அஞ்சல், செல்போன் எண், வீட்டு தொலைபேசி எண் என அனைத்து தகவல்களையும் பரிமாற இருக்கிறது.
உறுதி
ஆதலால், அடுத்து வரும் காலங்களில் ரூ. 10 லட்சத்துக்கு மேல் வருமானம் ஈட்டுபவர்களுக்கு மானிய கியாஸ் சிலிண்டர் ரத்து செய்யப்படுவது ஏறக்குறைய உறுதியாகிவிட்டது.
இது தொடர்பாக வருமான வரித்துறையினர், முறைப்படி வருமானவரி செலுத்துவோரின் விவரங்களை பாதுகாப்பாக பகிர்ந்து கொள்வது குறித்து பெட்ரோலியத் துறை அமைச்சகத்திடம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்ய உள்ளனர். வருமான வரித்துறையின் இந்த முடிவுக்கு, அதன் தலைமை அமைப்பான மத்திய நேர்முக வரிகள் வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது.
அரசே ‘கட்’ செய்கிறது...
இது குறித்து வருமான வரித் துறையின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், “ ஆண்டுக்கு ரூ. 10 லட்சம் சம்பாதிப்பவர்களைக் கண்டுபிடித்து, அவர்களுக்கு அரசு வழங்கும் ஆண்டுக்கு 12 சமையல் கியாஸ் சிலிண்டர்களை ரத்து செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. ஏற்கனவே சிலர் தாமாக முன்வந்து மானியத்தை விட்டுக்கொடுத்து உள்ளனர். ஆனால், பலர் இதை செய்யவில்லை. அதனால், அரசே முன்வந்து அவர்களுக்கு மானியத்தை ரத்து செய்ய இருக்கிறது. மிகவிரைவில் நடவடிக்ைககள் தொடங்கும்'' எனத் தெரிவித்தார்.