'நோட்டா'வுக்கு இவ்வளவு ஓட்டா...! வெளியானது பகீர் ரிப்போர்ட்...!
குஜராத் சட்டசபை தேர்தலில், மொத்த ஓட்டு எண்ணிக்கையில், 5 லட்சத்திற்கு மேற்பட்டோர் 'நோட்டா'வுக்கு ஓட்டளித்திருப்பது தெரிய வந்துள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக, ஒவ்வொரு தேர்தலின் போது, ' யாருக்கும் ஓட்டளிக்க விரும்பம் இல்லை 'எனப்படும், ' நோட்டா' வசதியை ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் தேர்தல் கமிஷன் ஏற்படுத்தி வருகிறது.
குஜராத் மாநில சட்டசபைக்கு கடந்த 9 மற்றும் 14 ஆம் தேதிகளில் இரு கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இரண்டு கட்ட தேர்தலையும் சேர்த்து சராசரியாக 68.41 சதவீத ஓட்டுகள் பதிவானது.
இதன் வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கியது. இதில் பாஜக முன்னிலை பெற்று வெற்றி பெற்றது. இதேபோல், ஹிமாச்சல் மாநிலத்திலும் பாஜகவே ஆட்சியை பிடித்தது.
இந்நிலையில், குஜராத் தேர்தல் தொடர்பாக, தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள மதியம் 2 மணி வரையிலான ஓட்டு எண்ணிக்கை விவரத்தில், குஜராத் தேர்தலில், 5,18,235 பேர், 'நோட்டா'வுக்கு ஓட்டு போட்டுள்ளனர். இது, 1.8 சதவீதம். பகுஜன் சமாஜ் கட்சி, தேசியவாத காங்., கட்சியை விட, ' நோட்டா'வுக்கு அதிகம் ஓட்டு கிடைத்துள்ளது.
பா.ஜ.,வுக்கு 1,38,74,833 ஓட்டுக்களும்( 49 சதவீதம்) காங்கிரசுக்கு 1,17,26,016 ஓட்டுக்களும் (41.5 சதவீதம்) கிடைத்துள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.